பட்டயம், தொழிற்படிப்புக்கு...மவுசு! பிளஸ் 1 சேர்க்கை சரிகிறது!!

கடலுார்:வேலையில்லா திண்டாட்டம் காரணமாக மாணவர்களுக்கு உயர் படிப்பின் மீது இருந்த மோகம் குறைந்து, பட்டயம் மற்றும் தொழிற்கல்வி மீது ஆர்வம் காட்ட துவங்கியுள்ளதால் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் மாணவர் சேர்க்கை கணிசமாக குறைந்துள்ளது.தங்கள் பிள்ளைகளை டாக்டராக, இன்ஜினியர் அல்லது வங்கி அதிகாரியாக வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரின் கனவாகும். இதற்கான பெற்றோர்களும் கடன் பட்டாவது தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து வருகின்றனர்.


பெற்றோர்களின் கனவையே மூலதனமாக கொண்டு புற்றீசலாக பெருகிய கல்வி நிறுவனங்களால் தமிழகத்தில் பட்டப் படிப்பு, இன்ஜினியரிங், டாக்டர் போன்ற உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. அதற்கேற்ப வேலை வாய்ப்பு கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. இன்ஜினியரிங் படித்தவர்கள் நகை கடைகளிலும், ஏஜன்சிகளிலும் சொற்ப சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதனால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் இன்ஜினியரிங் படிப்பின் மீதான மோகம் குறைந்துள்ளது. அதேபோன்று ஆசிரியர் பணி இன்றைய சூழலில் ஒதுக்கீட்டு இடங்களை விட கூடுதலாக ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். மேலும், அரசு பள்ளிகள் மெல்ல, மெல்ல மூடப்பட்டு வருவதால் இன்னம் 10 ஆண்டுகளுக்கு ஆசிரியர் வேலை கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


அதேபோன்று டாக்டர் படிக்க 'நீட்' தேர்வு தேர்ச்சி பெற்றாக வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் மத்தியில் உயர் படிப்பின் மீது ஆர்வம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் தற்போது வேலைவாய்ப்பு உள்ள பட்டயம் மற்றும் தொழிற்கல்வியின் மீது மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 10ம் வகுப்பு முடித்துள்ள மாணவர்கள் பிளஸ் 1 சேராமல் பட்டய படிப்பான பாலிடெக்னிக் அல்லது தொழிற்கல்வி படிக்க ஐ.டி.ஐ.,களில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.


இதன் காரணமாக. 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளி வந்து 24 நாட்கள் ஆன நிலையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்து 15 நாட்களாகிய நிலையில் பிளஸ் 1 வகுப்பில் போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லை. அதிலும் குறிப்பாக மாணவிகளை விட மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது.


மாவட்டத்தில் கடந்தாண்டு பிளஸ் 1 வகுப்பில் 30 ஆயிரத்து 140 மாணவ, மாணவிகள் சேர்ந்தனர். கடந்தாண்டு மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 36 ஆயிரத்து 864 மாணவ, மாணவிகளில் 33 ஆயிரத்து 743 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 25 ஆயிரம் பேர் மட்டுமே பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்துள்ளனர். அதேநேரத்தில் மாவட்டத்தில் உள்ள பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ.,க்களில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.