பிளஸ் 1 புத்தகம் நாளை முதல் கிடைக்கும்

புதிய பாடத்திட்டத்தில் தயாரான, பிளஸ் 1 பாட புத்தகங்கள், நாளை முதல் விற்பனை செய்யப்பட உள்ளன. அரசு பள்ளிகளில், இலவசமாக வழங்கப்படும்.தமிழக பள்ளிக் கல்வித்துறையில், 13 ஆண்டுகளுக்கு பின், பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, பிளஸ் 1க்கும், அடுத்த ஆண்டில், பிளஸ் 2வுக்கும் பாடத்திட்டங்கள் மாற்றப்படுகின்றன.


இந்த ஆண்டு, பிளஸ் 1 பாடத்திட்டத்தில், தொழில்நுட்ப தகவல்களுடன், புதிய பாடப்புத்தகங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.மே மாதமே, புத்தகங்கள் தயாரான நிலையில், பிழைகளை சரிசெய்ய, மறுஆய்வு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, புத்தகங்கள், நாளை முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இலவசமாக வழங்கப்பட உள்ளன.


தனியார் பள்ளிகளில், மொத்தமாக, 'ஆர்டர்' செய்தவர்களுக்கும், நாளை முதல் வழங்கப்பட உள்ளன.இது தவிர, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பாடநுால் நிறுவன புத்தக விற்பனை மையம், அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் உள்ள புத்தக விற்பனை மையங்களில், நாளை முதல், பிளஸ் 1 புத்தகங்கள் கிடைக்கும். தொழிற்கல்வி தவிர, அனைத்து வகை பாடப்பிரிவு புத்தகங்களும் கிடைக்கும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.