குரூப் 1 தேர்வு: வயது உச்சவரம்பு 37-ஆக உயர்வு

குரூப் 1 தேர்வினை எழுவதற்கான வயது உச்சவரம்பு 35-லிருந்து 37-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

இதுகுறித்து, பேரவை விதி 110-இன் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கு பெறுவதற்கான வயது உச்சவரம்பை உயர்த்திட பல்வேறு தரப்பினரிடம் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
அதன் அடிப்படையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு உள்ள வயது உச்சவரம்பினைப் போன்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1, 1ஏ, 1பி பணியிடங்களுக்கு தேர்வு எழுவதற்கான வயது உச்சவரம்பு உயர்த்தப்படுகிறது. அதன்படி, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 35-லிருந்து 37-ஆகவும், இதர பிரிவினருக்கான இப்போதுள்ள வயது உச்சவரம்பு 30-லிருந்து 32 ஆகவும் உயர்த்தப்படுகிறது.