அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பள்ளியை எப்படி நிர்வகிக்க வேண்டுமென 24 பக்க கையேட்டை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 
அதில், குறிப்பாக ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது. இவற்றில் குறிப்பாக ஆசிரியர்கள் வகுப்பு நேரத்தில் வெளியே செல்லக்கூடாது. ஆசிரியர்கள் 10 நிமிடம் தாமதமாக பணிக்கு வந்தால், வழங்கப்படும் ‘கிரேஸ் டைம்’ இனிமேல் வழங்கப்பட மாட்டாது.
ஆசிரியைகள் வெள்ளிக்கிழமைகளில் 1 மணி நேரம் கால தாமதமாக வர இனிமேல் அனுமதியில்லை. தற்செயல் விடுப்பு ஆண்டுக்கு 12 நாட்கள் மட்டுமே வழங்கப்படும். அரைநாள் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் பிற்பகல் பள்ளி துவங்கும்போது பணிக்கு வந்திருக்க வேண்டும்.

பிற பணியாளர்கள் மதியம் 2 மணிக்கு பணிக்கு வர வேண்டும். அரசு விடுமுறை, தற்செயல் விடுப்பு என இரண்டும் சேர்த்து 10 நாட்களுக்கு மேல் எடுக்க கூடாது. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு, அரை சம்பள விடுப்பு, மருத்துவ விடுப்பு ஆகியவற்றுடன் இணைக்கக்கூடாது. 
அரசு விடுமுறை நாட்களில் சிறப்பு பணிக்காக அலுவலரை பணிக்கு அழைக்கலாம். விடுமுறை தினங்களில் பணியாற்றுபவர்கள் பணியாற்றிய தினத்தில் இருந்து 30 நாட்களுக்குள் விடுமுறையை எடுக்க தலைமை அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 
மேலும் இந்த கையேட்டில், பொதுப்பணி நிர்வாகம், பணிப்பதிவேடு பராமரிப்பு, பணி வரன்முறை, தகுதிக்கான பருவம் முடித்தல், பணி நிரந்தரம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, அலுவலக நடைமுறை, 17(ஏ), 17(பி) சட்டப்பிரிவின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது, நீதிமன்ற நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பள்ளி கல்வித்துறை உத்தரவின்படி ஆசிரியர்கள் இனிமேல் பணி நேரத்தில் வெளியில் செல்ல முடியாது. தாமதமின்றி குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.