பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகப்பை அடுத்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் பாடநூல் கழக தலைவர் தகவல்

பள்ளிக்கூட மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகப்பை, காலணி உள்ளிட்ட 9 வகையான பொருட்கள் அடுத்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவர் பா.வளர்மதி கூறினார்.

தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவர் பா.வளர்மதி நேற்று  கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு வருகிற கல்வி ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. மற்ற வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. புதிய பாடத்திட்ட வகுப்புகளுக்கு பாடப்புத்தகம் அச்சிடும் பணி நடந்துவருகிறது. விரைவில் அச்சடிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கும் நாளில் (ஜூன் மாதம் 1-ந் தேதி) மாணவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

புத்தகப்பை, காலணிகள், கிரயாண், ஜியாமெண்டிரி பாக்ஸ், கலர் பென்சில் உள்பட 9 வகையான பொருட்கள் விலை இன்றி அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு கொடுப்பதற்காக உடனே டெண்டர் விடப்படுகிறது. எனவே 9 பொருட்களும் தாமதமின்றி அடுத்த மாதத்திற்குள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

புதிய பாடத்திட்டத்தில் அச்சடிக்கப்படும் புத்தகங்களின் விலையில் மாற்றம் உள்ளது. அந்த மாற்றம் குறித்து அரசு அறிவிக்கும்.

இவ்வாறு பா.வளர்மதி கூறினார்.