மருத்துவம் சார்ந்த படிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு தேவை

மருத்துவம் சார்ந்த படிப்புகள் குறித்து மாணவர் களுக்கு விழிப்புணர்வு தேவை என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறினார்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறியதாவது.



எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மட்டும் மருத்துவ படிப்பல்ல, மருத்துவம் சார்ந்த படிப்புகள் 20 உள்ளன. இதுகுறித்து மாணவ-மாணவிகளுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதால் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் இந்த படிப்புகளை தொடங்கினோம்.

அவற்றில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை தொழில்நுட்பம், கார்டியாக் டெக்னாலஜி, கிரிட்டிக்கல்கேர் டெக்னாலஜி, டாக்டரின் உதவியாளர், ஆபரேசன் தியேட்டர் மற்றும் மயக்கமருந்து தொழில்நுட்பம், ரேடியாலஜி தொழில்நுட்பம், கண் மருத்துவ தொழில்நுட்பம் உள்பட 10 படிப்புகளை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் தொடங்கினோம்.

ஒவ்வொரு படிப்பிலும் தலா 20 பேர் சேர்க்கப்படுவார்கள். ஆனால் கடந்த வருடம் 10 படிப்புகளிலும் சேர்த்து 100 பேர் கூட சேரவில்லை. இவை அனைத்தும் 4 வருட படிப்புகள். எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். கலந்தாய்வு முடிந்த பிறகு இதற்கான சேர்க்கை குறித்து அறிவிப்போம்.

இந்த பாடங்களில் படிக்கும்போதே வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. எனவே இந்த பாடங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு தேவை.

இவ்வாறு டாக்டர் எஸ்.கீதாலட்சுமி தெரிவித்தார். பதிவாளர் டாக்டர் பாலசுப்பிரமணியம் உடன் இருந்தார்.
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks