நிபா வைரஸ் எப்படி பரவுகிறது..? அறிகுறிகள் என்ன தெரியுமா..?

நிபா வைரஸ்: 1998 - 99-ஆம் ஆண்டுகளில் மலேசியாவில் உள்ள சுங்கை நிபா என்ற கிராமத்தில் காய்ச்சலால் மக்கள் தொடர்ச்சியாக உயிரிழந்தனர். அவர்களின் ரத்தத்தைச் சோதனை செய்து பார்த்தபோதுதான், இந்த வைரஸ் முதல்முறையாகக்
கண்டுபிடிக்கப்பட்டது.
எங்கு உற்பத்தியாகிறது:
*
பழந்தின்னி வெளவால்களின் சிறுநீரகம், உமிழ்நீர், முகம் ஆகிய இடங்களில் இந்த வைரஸ் உற்பத்தியாகிறது.
* இந்த வெளவால்கள் கடித்த பழங்களை பிற விலங்குகள் உண்ணும்போதும், அவற்றின் சிறுநீர், உமிழ்நீர் விலங்குகளின் மீது படுவதன் மூலமும் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
* நிபா வைரஸ் பன்றி, பூனை, நாய், குதிரை உள்ளிட்ட விலங்குகளுக்கு பரவியதற்கான ஆதாரங்கள் உள்ளன.
* இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் மனிதர்கள் பழகும்போது அவர்களுக்கும் நிபா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
அறிகுறிகள்:
*
நிபா வைரஸ் 5 முதல் 14 நாள்கள் உடலில் இருந்து பாதிப்பை ஏற்படுத்தும்.
* காய்ச்சல், தலைவலி, சோர்வு, தன்னிலையிழத்தல், மனக்குழப்பம் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றும்.
* நோய் தீவிரமடையும்போது நோயாளிகள் சுயநினைவை இழப்பர்.
* அதைத்தொடர்ந்து அவர்களது நரம்பு மண்டலம் மற்றும் சுவாச மண்டலம் ஆகியவை பாதிக்கப்பட்டு உயிரிழப்பர்.
சிகிச்சைகள் என்ன?:
* நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம், சிறுநீர், உமிழ்நீர், வியர்வை உள்ளிட்டவற்றின் மாதிரிகளைப் பரிசோதிப்பதன் மூலம் பாதிப்பைக் கண்டறிய முடியும்.
* மாதிரிகளை புணே, மணிபால் ஆகிய இடங்களில் உள்ள ஆய்வுக்கூடங்களில் பரிசோதிக்க முடியும்.
* டெங்கு காய்ச்சலைப் போன்றே இந்த வைரஸ் பாதிப்புக்கும் பிரத்யேக சிகிச்சை முறைகள் கிடையாது.
* இந்த நோயிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான தடுப்பு மருந்துகள், தடுப்பூசியும் கிடையாது. எனினும் அறிகுறிகளுக்கு அளிக்கப்படும் ஆதரவு சிகிச்சைகள் மூலம் இதற்கு சிகிச்சை அளிக்க முடியும்.
பாதுகாத்துக் கொள்வது எப்படி?
* நோய்வாய்ப்பட்ட பன்றிகள் இருக்கும் பகுதிகளில் புழங்கக் கூடாது.
* காய்கறிகள், பழங்களை நன்கு தண்ணீரில் கழுவிய பின்புதான் உட்கொள்ள வேண்டும்.
* வெளவால் உள்ளிட்ட பறவைகள் கொத்திய பழங்களைச் சாப்பிடக் கூடாது.
* காய்ச்சல் உள்ளிட்ட ஏதேனும் அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
* சுய மருத்துவம் கூடாது என்பதே சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்.