சிவில் சர்வீஸ் தேர்வு விதிமுறைகளை மாற்ற முடிவு?

புதுடில்லி : ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வு விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்த, அரசு ஆலோசித்து வருகிறது.


யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்துகிறது. தற்போது, இந்த தேர்வாளர்களுக்கு, முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுவோருக்கு, பிரதான தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வுகளின் அடிப்படையில், மதிப்பெண் கணக்கிடப்பட்டு, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணியிடங்கள் ஒதுக்கப்படும். இதற்கு பின், மூன்று மாத அடிப்படை பயிற்சி அளிக்கப்படும் நடைறை, தற்போது பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில், இந்த நடைமுறையில் மாற்றங்கள் செய்ய, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதன்படி, இனிமேல், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும், மூன்று மாதம், அடிப்படை பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியில் அவர்கள் பெறும் தர மதிப்பீடு, சிவில் சர்வீஸ் தேர்வில் பெற்ற மதிப்பெண் ஆகிய இரண்டின் அடிப்படையில், அவர்களுக்கு, பணி ஒதுக்கீடு செய்வது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது.

இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு, மத்திய பணியாளர் துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், அடிப்படை பயிற்சியில் அளிக்கப்படும் தர மதிப்பீட்டிற்கு முக்கியத்துவம் தருவதற்கான சாத்தியம் பற்றி ஆராயும்படி, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இதற்கிடையில், 'சிவில் சர்வீஸ் தேர்வுக்கான புதிய விதிமுறைகளை, மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்' என, மத்திய அரசுக்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.