33 தொடக்க பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்கவில்லை - அதிர்ச்சி தகவல்

தமிழக அரசு சார்பில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை மற்றும்
மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன.
தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது.
குழந்தைகளின் தொடக்கக்கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக மதிய உணவு திட்டம், விலையில்லா சீருடைகள், புத்தகங்கள், காலணி போன்ற திட்டங்களை அரசு செயல் படுத்தி வருகிறது.
எனினும் அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் மிகவும் குறைவாக இருப்பதாக தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கம், தொடக்கக்கல்வி இயக்கம் ஆகியவை ஆய்வு நடத்தி கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது.
இதையடுத்து அரசு தொடக்கப்பள்ளிகளில் எத்தனை குழந்தைகள் படிக்கிறார்கள்? எத்தனை ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள்?
எத்தனை சத்துணவு ஆயாக்கள் இருக்கிறார்கள்? போன்ற விகிதாச்சார விவரங்களை தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை கணக்கில் எடுத்தது.
 
அரசு நடத்திய ஆய்வில் 890 தொடக்கப்பள்ளிகளில் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக இருப்பது தெரிய வந்தது.
29 பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி, 4 நகராட்சி தொடக்கப்பள்ளி என 33 தொடக்கப்பள்ளிகளில் ஒரு மாணவ- மாணவி கூட படிக்கவில்லை என்பதும், அங்கு ஆயாக்கள் மட்டுமே தினமும் வந்து செல்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்தது.
பெரும்பாலான பள்ளிகளில் ஒற்றை இலக்கில் மாணவ- மாணவிகள் எண்ணிக்கை இருந்தது தெரிய வந்தது.
 
இதனால் அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளை வேறு பள்ளிகளில் சேர்த்துவிட அரசு முடிவு செய்துள்ளது.
அப்படியே அந்த மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று விட்டாலும், இயங்காமல் இருக்கும் இந்த பள்ளிக்கூடங்களை, மாணவர்கள் அங்கு வந்து படிப்பதற்கு நன்கு வசதி உள்ள இடங்களாக மாற்றுவதற்கு அரசு உத்தேசித்துள்ளது.