வங்கி ஊழியர்கள் 30, 31ம் தேதி 'ஸ்டிரைக்'

'ஊதிய உயர்வு பேச்சில், உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி 30, 31ம் தேதிகளில் வேலைநிறுத்தம் நடக்கும்' என, வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம், 2017 அக்டோபரில் முடிந்தது; நவம்பர் முதல், புதிய ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். இதுகுறித்து, வங்கி நிர்வாகங்களுடன் பல சுற்று பேச்சு நடத்தப்பட்டது.



வங்கிகளின் வாராக் கடனை காரணம் காட்டி, 2 சதவீத ஊதிய உயர்வு வழங்க, வங்கி நிர்வாகங்கள் முடிவு செய்தன. இதையடுத்து, நாளையும், நாளை மறுநாளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, அகில இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு, 24ம் தேதி அறிவித்தது.

இந்நிலையில், 'ஏற்கனவே திட்டமிட்டபடி, 30, 31ம் தேதிகளில், வேலைநிறுத்தம் நடைபெறும்' என, இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.