பிளஸ்–2 விடைத்தாள் நகல் ஜூன் 2–ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ்–2 விடைத்தாள் நகல் ஜூன் மாதம் 2–ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கு 4–ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

2018–ம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ்–2 பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள்களின் நகல்கோரி விண்ணப்பித்த மாணவர்கள் அடுத்த(ஜூன்) மாதம் 2–ந் தேதி அன்று பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்தபிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து ஜூன் 4–ந் தேதி முதல் 6–ந் தேதி வரையிலான தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.