பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி 16-ந் தேதி வெளியாகும் அரசு தேர்வுத்துறை அதிகாரி தகவல்

தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. கடந்த கல்வி ஆண்டு வரை பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி விடைத்தாள் திருத்திய பிறகு முடிவு செய்யப்படும்.

இதனால் மாணவர்கள் மன உளைச்சல் அடைகிறார்கள் என்று கருதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 16-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 23-ந் தேதியும் வெளியாகும் என்று முன்கூட்டியே அறிவித்து இருந்தார். அதன்படி பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வருகிற 16-ந் தேதி வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

1998-ம் ஆண்டு வரை தேர்வு முடிவு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை அனுப்பி வந்தது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்று பள்ளிகளில் உள்ள விளம்பர பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்படும். அவற்றை மாணவர்கள் பார்த்து வந்தனர்.

2003-ம் ஆண்டு முதல் அந்த நிலை மாற்றப்பட்டு தேர்வுத்துறையின் இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன. 2015-ம் ஆண்டு முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் தற்காலிக சான்றிதழ் பதிவிறக்கம் செய்துகொள்ளும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்தது.

கடந்த ஆண்டு (2017) அரசு தேர்வுத்துறை பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய பொதுத்தேர்வு முடிவுகள் அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் கொடுத்த செல்போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் தேர்வில் ரேங்க் அடிப்படையும் கைவிடப்பட்டது. அதாவது யார் முதல் என்று யாருக்கும் தெரியாது. அதனால் மாணவர்களின் மன உளைச்சல் தவிர்க்கப்பட்டது.

இந்த ஆண்டு வருகிற 16-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. பள்ளிகள் வழங்கி உள்ள இணையதள முகவரியில் (இ.மெயில்) தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை பதிவேற்றம் செய்ய உள்ளது.

மேலும், தேர்வுத்துறை அளிக்கும் முகவரியில் தேர்வு முடிவுகளை வருகிற 16-ந் தேதி அனைவரும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். காகிதம் இல்லா பயன்பாடு நடைமுறைக்கு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.