ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து, நாளை மறுநாள், பள்ளிகள் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில், பள்ளி இறுதி தேர்வு மற்றும் பொது தேர்வுகள், ஏப்., 20ல் முடிந்தன. அடுத்த நாள் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. 


உத்தரவு : ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளை போன்றே, ஏப்., மூன்றாவது வாரம் முதல், விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில், 41 நாட்கள் கோடை விடுமுறை, நாளை முடிவுக்கு வருகிறது. அனைத்து பள்ளிகளும், நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளன. அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும், ஜூன், 1 முதல் வகுப்புகளை நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளி திறப்பு நாளில், மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


தேர்வு முடிவு : இந்த ஆண்டு முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.அதேபோல், பள்ளி திறக்கும் நாளிலேயே, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பொது தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளும், தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட உள்ளன.