இன்று பிளஸ் 1, 'ரிசல்ட்'

முதல் முறையாக இந்த ஆண்டு நடத்தப்பட்டுள்ள, பிளஸ் 1 பொது தேர்வின் முடிவுகள், இன்று வெளியாகின்றன. தமிழகத்தில், இந்தாண்டு முதல், பிளஸ் 1க்கும் பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மார்ச்சில் துவங்கி, ஏப்ரலில் முடிந்த, இந்த தேர்வில், 8.61 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.

 இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இன்று காலை, 9:00 மணிக்கு, பிளஸ் 1 தேர்வு முடிவு வெளியாகும். தேர்வர்களின் மொபைல்போன் எண்ணுக்கு, மதிப்பெண் விபரம், எஸ்.எம்.எஸ்., ஆக வரும். மேலும், www.tnresults.nic.in,www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில், பதிவு எண், பிறந்த தேதியை பயன்படுத்தி, மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்
பள்ளி தலைமை ஆசிரியரிடம், ஜூன், 4 முதல் மதிப்பெண் பட்டியலை பெறலாம். மேலும், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். அரசு தேர்வுத்துறையால், அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் வரை மட்டுமே, இந்த மதிப்பெண் பட்டியல் செல்லும்
மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியரும், தனித்தேர்வர்களுக்கு, அவர்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியரும், மதிப்பெண் பட்டியலில் சான்றொப்பம் அளித்தால் மட்டுமே, அந்த மதிப்பெண் பட்டியல் செல்லும்
விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டலுக்கும், ஜூன், 1, 2 மற்றும் 4ம் தேதிகளில், பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கட்டணத்தை, பள்ளிகளில் பணமாக செலுத்த வேண்டும்
விடைத்தாள் மறுமதிப்பீடு தேவை என்றால், அவர்கள் முதலில் விடைத்தாள் நகலை பெற வேண்டும். இல்லாவிட்டால், விண்ணப்பிக்க முடியாது. விடைத்தாள் நகல் கேட்பவர்கள், மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை. விடைத்தாள் நகல் பெற்றபின், மறுமதிப்பீடுக்கும், மறுகூட்டலுக்கும் விண்ணப்பிக்க அவகாசம் தரப்படும்
மறுகூட்டல், மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும் ஒப்புகை சீட்டை பாதுகாக்க வேண்டும். அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, முடிவுகளை அறிந்து கொள்ளலாம்
தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு பதிவு செய்து எழுதாதவர்களுக்கு, சிறப்பு துணை தேர்வு, ஜூலை, 5ல் துவங்கும். இதற்கான அட்டவணை, விண்ணப்பிக்கும் விபரங்கள், பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மாணவர்கள் கலக்கம் : பிளஸ் 1 பொது தேர்வில், பெரும்பாலான வினாத்தாள்கள் கடினமாக இருந்தன. குறிப்பாக, ஜே.இ.இ., மற்றும், 'நீட்' நுழைவு தேர்வில் கேட்கப்படுவது போன்ற கேள்விகள் இடம் பெற்றதால், மாணவர்கள் பதில் அளிக்க திணறினர். விடை திருத்தத்தின்போது, 40 சதவீத மாணவர்கள், 'ஜஸ்ட் பாஸ்' என்ற தேர்ச்சி மதிப்பெண் மட்டுமே எடுத்தது தெரிய வந்தது.


இந்நிலையில், இன்றைய தேர்வு முடிவு எப்படி இருக்கும் என, மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர். ஆனால், தேர்ச்சி விகிதம் பாதித்தால், விமர்சனம் ஏற்படும் என்பதால், பெரும்பாலான மாணவர்கள், தேர்ச்சி நிலைக்கு கொண்டு வரப்பட்டிருப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.