நாளை மறுநாள் பிளஸ் 1, 'ரிசல்ட்'

சென்னை : அரசு தேர்வுத்துறை, ஓராண்டுக்கு முன் அறிவித்தபடி, நாளை மறுநாள், பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.


தமிழகத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொது தேர்வு நடத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் பெரிதும் எதிர்பார்க்கும், பிளஸ் 1 தேர்வின் முடிவுகள், நாளை மறுநாள் வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டு, பள்ளி துவங்கும் நாளிலேயே, பொது தேர்வுகள் நடக்கும் தேதியும், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளும் அறிவிக்கப்பட்டன.

அதேபோல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வின் முடிவுகள், திட்டமிட்டபடி அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பிளஸ் 1 தேர்வு முடிவுகளும், அறிவித்தது போல், 30ம் தேதி வெளியாகின்றன. மாணவர்கள் பதிவு செய்துள்ள, மொபைல் போன் எண்களுக்கு, மதிப்பெண்கள் வரும். ஜூன், 1க்கு பின், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த தேர்வில், தேர்ச்சி பெற்றாலும், பெறாவிட்டாலும் மாணவர்கள், பிளஸ் 2வுக்கு அனுப்பப்படுவர். பிளஸ் 2 படித்தபடியே, பிளஸ் 1 தேர்வில் தோல்வியுற்ற பாடங்களை மீண்டும் எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.