199 ரூபாயில் அதிரவைக்கும் புதிய சலுகைகள்: ஜியோ அறிமுகம்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.199க்கு அதிரவைக்கும் பல புதிய சலுகைகளை அறிமுகப்படுத்த உள்ளது.

தொலைத்தொடர்புத் துறையில் அதிகரித்து வரும் போட்டியைச் சமாளிக்கும் வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. ஆனால், வரும் 15-ம் தேதி முதல் ஜியோ நிறுவனம் அதிரடியான சலுகைகளை, மிகக் குறைந்த விலையில் போஸ்ட்பெய்ட் சேவையைத் தொடங்குகிறது.
ரூ.199க்கு அன்லிமிடட் கால்ஸ், மாதத்துக்கு 25 ஜிபி நெட், வெளிநாடுகளுக்கு பேசுவதற்கு நிமிடத்துக்கு 50 காசுகள் என பல்வேறு சலுகைகளை அளிக்கிறது. இத்திட்டம் வரும் 15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஜியோ போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் சிம்கார்டைப் போட்டவுடன் அனைத்து வசதிகளும், அதாவது வாய்ஸ் கால், இன்டர்நெட், எஸ்எம்எஸ், சர்வதேச அழைப்புகள் ஆகியவை அனைத்தும் முன்கூட்டியே ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும்.
இதற்காக வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. மேலும் வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்காக ரோமிங் வசதியையும், டாரிப்களையும் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் எந்த சேவையையும் பெற்றுக்கொண்டு, ஜியோ சேவைக்கு மாறிக்கொள்ள முடியும்.
ஜியோ போஸ்ட்பெய்ட் சேவையின் முக்கிய அம்சமாக அந்த நிறுவனம் குறிப்பிடுகையில், அதிகபட்சமான பில் கட்ட வேண்டியது இருக்காது, வாடிக்கையாளர்கள் அவ்வப்போது தங்களின் பில் கட்டணத்தை தாங்களாகவே சோதனை செய்து பார்க்க முடியும்.
இதன்படி மாதத்துக்கு ரூ.199-க்கு போஸ்ட்பெய்ட் சேவை பெறுவோருக்கு, மாதம்முழுவதும் எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துடனும் இலவசமாக அழைப்புச் செய்யலாம். வெளிநாடுகளில் பேசும் போது நிமிடத்துக்கு 50 காசு கட்டணம். சர்வதேச அழைப்புக்கு எந்தவிதமான காப்புக் கட்டணம் செலுத்த தேவையில்லை, ரோமிங் இலவசம், உள்நாட்டில் அன்லிமிடட் எஸ்எம்எஸ் சேவை. மாதத்துக்கு 25 ஜிமி இன்டர்நெட் இலவசம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ரூ.575, ரூ.2875, ரூ.5,751 ஆகிய கட்டணங்களில் போஸ்ட்பெய்ட் இணைப்புகள் ஜியோ நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வரும் 15-ம் தேதி முதல் ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் சேவையைத் தொடங்குகிறது.
இதே சலுகைகளை ஏர்டெல் நிறுவனம் ரூ.399க்கும், வோடபோன் நிறுவனம் ரூ.399க்கும், ஐடியா நிறுவனம் ரூ.389க்கும் அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.