அரசு பாலிடெக்னிக்களில் 14 முதல் விண்ணப்பம்

அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நேரடியாக இரண்டாம் ஆண்டு, டிப்ளமா படிப்பில் சேர, 14ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.

தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், இரண்டு ஆண்டு, ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நேரடியாக இரண்டாம் ஆண்டு, டிப்ளமா படிப்பில் சேரலாம்.
இதற்கான விண்ணப்ப படிவங்கள், 14 முதல், ஜூன், 1 வரை, கல்லுாரி வேலை நாட்களில், காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை வழங்கப்படும். அதேபோல, சென்னை தரமணியில் உள்ள, மத்திய பாலிடெக்னிக் கல்லுாரியில் நடத்தப்படும், இரண்டரை ஆண்டு செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கியியல் டிப்ளமா படிப்பிற்கான, முதலாம் ஆண்டு சேர்க்கை நடக்க உள்ளது. 
மேலும், டாக்டர் தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில், ஓராண்டு ஒப்பனைக்கலை பட்டயப்படிப்பிற்கான, மாணவியர் சேர்க்கையும் நடைபெற உள்ளது.இதற்கும் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன், 1க்குள், பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு, அனுப்பி வைக்க வேண்டும்.