10ம் வகுப்பு தேர்வு எழுதியோருக்கு இன்று தற்காலிக மதிப்பெண் சான்று

சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, இன்று முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.


தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், 23ல், வெளியாகின. தேர்வு எழுதிய, 10 லட்சம் பேரில், 94.5 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்றனர். தேர்வு முடிவுகள், மாணவ- - மாணவியர் மற்றும் பெற்றோரின் மொபைல் போன் எண்ணுக்கு, மதிப்பெண் விபரத்துடன் அனுப்பப்பட்டன. இந்த மதிப்பெண் விபரத்தை பயன்படுத்தி, மாணவர்கள், பிளஸ் 1ல் சேர, விண்ணப்பித்து வருகின்றனர்.

அவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள், இன்று முதல் வழங்கப்பட உள்ளன. இன்று பிற்பகல் முதல்,www.dge.tn.nic.in என்ற, இணையதள முகவரியில், மாணவர்கள், தற்காலிக சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். மேலும், மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகளுக்கும், தனித் தேர்வர்கள், தேர்வு மையங்களுக்கும் சென்று, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம். இந்த தேர்வில், தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஜூன், 28ல், சிறப்பு தேர்வு நடத்தப்படும்.

அவகாசம் :
பத்தாம் வகுப்பு தேர்வில், மறுகூட்டலுக்கு விரும்பும் மாணவர்கள், 24 முதல், 26ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. அதேநேரம், 'ஸ்டெர்லைட்' விவகாரத்தால், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இணையதள சேவை ரத்தானதால், மறுகூட்டலுக்கு வாய்ப்பின்றி திணறினர். இந்நிலையில், மூன்று மாவட்டங்களிலும், இணையதள சேவை இயல்பு நிலைக்கு வந்ததும், கூடுதல் அவகாசம் தரப்படும் என, தேர்வுத் துறை அறிவித்தது. தற்போது, துாத்துக்குடிக்கு இன்னும், இணையதள சேவை கிடைக்காததால், திருநெல்வேலி, கன்னியாகுமரிக்கு மட்டும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, இன்று கூடுதல் அவகாசம் அறிவிக்கப்படும் என, தெரிகிறது.