10ம் வகுப்பு, 'ரிசல்ட்' தேதி மாற்றமில்லை : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன்

''அறிவித்தபடி, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட தேதியில் வெளியாகும். இதில் எவ்வித மாற்றமில்லை,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில், கொடிவேரி தடுப்பணை வளாகத்தில், விழிப்புணர்வு மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. மையத்தை திறந்து வைத்த அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:



தமிழகத்தில், ஜூன், 1ல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். ஏனெனில், புதிய பாடத்திட்டத்தின் படி, குறைந்தது, 185 நாள், மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டியுள்ளது. அதனால், ஜூன், 1ல், பள்ளிகளை திறக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இந்தியாவே வியக்கும் அளவில், பாடத்திட்டம் அமைந்துள்ளது. இதை, அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். எழுத்துக்களின் அச்சு வடிவங்கள், மல்டி கலரில் படங்கள் என, மாணவர்களிடம் பயிலும் ஆர்வத்தை துாண்டும் வகையில், புதிய பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.சீருடைகளை மாற்றி அமைக்க, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்க, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், குறிப்பிட்ட தேதியில் முறையாக அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.வரும், 23ம் தேதி, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில், மாற்றம் இருக்கும் என செய்திகள் வெளியானதால், மாணவர்கள், பெற்றோர் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில், 'திட்டமிட்டபடி வெளியாகும்; மாற்றமில்லை' என அமைச்சர் கூறியுள்ளதால், மாணவர், பெற்றோர் நிம்மதி அடைந்துள்ளனர்.