நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட் தேர்வு) சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்த இருக்கிறது.

வருகிற மே மாதம் 6-ந் தேதி ‘நீட்’ தேர்வு நடைபெற உள்ளது.
இதற்கான நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) கடந்த 18ந்தேதி வெளியானது.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.  அவர், நாடு முழுவதும் ஒரே தேர்வு முறை மருத்துவ கல்விக்கு கடைப்பிடிக்கப்படுகிறது என்றார்.

தொடர்ந்து அவர், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது பற்றி 2 மாதங்களில் தெளிவான முடிவு எட்டப்படும்.  எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது பற்றி தமிழக அரசுடன் பேசி வருகிறோம்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் பல்வேறு சவால்கள் நீடித்து வருகின்றன.  அனைத்து மக்களும் எளிதில் அணுக கூடிய ஓர் இடத்தினை தமிழக அரசு தேர்வு செய்து தந்தபின் உடனே அதுபற்றி பரிசீலனை மேற்கொள்ளப்படும் என கூறினார்.