சான்றிதழில் பிழை இருந்தால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை

'பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில், பெயர் விபரங்களில், பிழைகள் இருந்தால், தலைமை ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, பொது தேர்வுகளை, அரசு தேர்வுத்துறை நடத்தி முடித்துள்ளது. தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன் வரை, மாணவர்களின் பெயர் விபரங்களில் தவறுகள் இருந்தால், அவற்றை திருத்த, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


இந்நிலையில், 2017 பொது தேர்வு முடிந்து, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் போது, பல மாணவர்களுக்கு, பெயர், பெற்றோர் பெயர், இனிஷியலில் பிழைகள் இருந்தன.இதனால், உயர்கல்விக்கு சென்ற மாணவர்களுக்கு பிரச்னைகள் ஏற்பட்டன. பிழைகளை திருத்தி, மீண்டும் புதிய சான்றிதழ் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்த ஆண்டு, இதுபோன்ற பிரச்னை வராமல் தடுக்க, மாணவர் விபரங்களில் பிழைகளை திருத்த, தேர்வு முடிந்த பிறகும், கூடுதல் அவகாசத்தை தேர்வுத் துறை வழங்கியுள்ளது. இதற்கான சுற்றறிக்கை, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டது. இதன்படி, பிழைகளை திருத்துவதற்கான மனு அளிக்க, இன்று கடைசி நாள்.'இந்த கூடுதல் அவகாசத்திற்கு பின்னரும், தேர்வு முடிவுகள் வந்ததும், மாணவர்களுக்கு வழங்கும் சான்றிதழில் பிழைகள் இருப்பதாக, தேர்வுத் துறைக்கு புகார் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு அபராதம் விதிக்கப்படும். 'மேலும், துறை ரீதியாக, தலைமை ஆசிரியர் மீது, ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்' என, தேர்வுத் துறை எச்சரித்துள்ளது.