புள்ளியியல் திருத்தினால் தான் கணிதம் விடைத்தாள் கிடைக்கும் : அதிருப்தியில் ஆசிரியர்கள்

மதுரையில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் முகாமில், 'புள்ளியியல் பாடம் திருத்தினால் தான் கணிதம் விடைத்தாள் திருத்த முடியும்,' என கணித ஆசிரியர்கள் வற்புறுத்தப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில், மதுரை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு வழக்கமான பாடங்களுடன், புள்ளியியல், அரசியல் அறிவியல், இந்திய கலாசாரம், புவியியல் என மிக குறைந்த எண்ணிக்கையில் எழுதிய விடைத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன.

மதுரைக்கு புள்ளியியல் 5000, அரசியல் அறிவியல் 4000 விடைத்தாள் வழங்கப்பட்டுள்ளன. அப்பாடங்களுக்கான ஆசிரியர் மிக குறைவு. இதனால், 'கணிதம் ஆசிரியர்களை புள்ளியியலும், வரலாறு ஆசிரியர்களை அரசியல் அறிவியலும் திருத்த வேண்டும்,' என அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.ஆசிரியர்கள் கூறியதாவது: கணிதம் திருத்த வேண்டும் என்றால் அதற்கு முன் புள்ளியியல் திருத்த வற்புறுத்துகின்றனர். ''நடத்தாத பாடங்கள் விடைத்தாளை எவ்வாறு திருத்த முடியும்,'' என கேட்டால் "கீ ஆன்சர் அடிப்படையில் மதிப்பெண் வழங்கலாம்," என்கின்றனர். 

இதேநிலை தான் வரலாறு ஆசிரியர்களுக்கும். மறுகூட்டல்,
விடைத்தாள் நகலில் மதிப்பெண் வித்தியாசம் மற்றும் தவறு ஏற்பட்டால், நாங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். இப்போக்கை அதிகாரிகள் கைவிட வேண்டும், என்றனர்.