தமிழக மாணவிக்கு கேரளாவில், 'நீட்' மையம்

காரைக்குடி: 'நீட்' தேர்வில், தமிழகத்தில் உள்ள தேர்வு மையத்தை பதிவு செய்தவர்களுக்கு, கேரளாவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.'நீட்' தேர்வு, மே 6ம் தேதி நடக்கிறது. மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, அந்தந்த மாநிலத்தில் உள்ள மூன்று தேர்வு மையங்களில் ஒன்றை குறிப்பிட வேண்டும்.தமிழக மாணவர்கள், மதுரை, திருச்சி, சென்னை மையங்களை தேர்வு செய்தனர். 


தற்போது, 'ஹால் டிக்கெட்' அனுப்பப்பட்டுள்ளது. இதில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா என, பிற மாநில மையங்களின் தேர்வு மையம் குறிப்பிடப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த, அருட்செல்வர் அண்ணா கூறியதாவது:என் மகளுக்கு, தமிழகத்தில் உள்ள, மூன்று மையங்களுக்கு பதிலாக, ஹால் டிக்கெட்டில் கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள ஒரு பள்ளியின் பெயர் வந்துள்ளது.பலருக்கு இது போல் மாறியுள்ளது. மையத்தை மாற்ற, ஆன்லைனில் வழிவகை இல்லை. 'ஹெல்ப் டெஸ்க், டோல்ப்ரீ' எண்கள் எப்போதும், 'பிசி'யாகவே உள்ளன. மூன்று அலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை உபயோகத்தில் இல்லை என வருகிறது.இணைப்பு கிடைத்தாலும், எதிர்முனையில், டில்லியில் இருந்து ஹிந்தியில் பேசுகிறார். ஆங்கிலத்தில் புரிய வைக்க முடியவில்லை. தமிழக அரசு, இவ்விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.