ஒரே நாளில் 'நீட்', டி.என்.பி.எஸ்.சி. கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி

நாடு முழுவதும் மருத்துவ படிப்படிற்கான நீட் நுழைவு தேர்வு, மே 6ல் நடக்கிறது. இத்தேர்வை சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. இதற்காக மாவட்டம் தோறும் தேர்வு மையங்கள் சி.பி.எஸ்.இ., சார்பில் தேர்வு செய்யப்பட்டு விட்டது. அப்பள்ளிகளுக்கு உரிய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதே நாளில் (மே 6) டி.என்.பி.எஸ்.சி.,யின் தடயவியல் துறையில் ஆய்வக உதவியாளர் பணிக்கும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 


தேர்வு மையங்கள் அமைக்க பள்ளிகள் விவரத்தை கல்வித்துறையிடம் மாவட்ட நிர்வாகம் பெற்றது. அப்பட்டியலில் பல பள்ளிகள் ஏற்கெனவே 'நீட்'க்கு ஒதுக்கப்பட்டு விட்டது என கல்வி அதிகாரிகளுக்கு தற்போது தெரியவந்துள்ளது. இதனால் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மையங்கள் அமைப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: கல்வி அதிகாரிகளுக்கே தெரியாமல் நீட் தேர்வுக்கான மையங்களை சி.பி.எஸ்.சி., ஏற்பாடு செய்து விட்டது. பல பள்ளிகள், 'தங்கள் பள்ளியில் நீட் தேர்வு நடப்பதால், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மையப் பொறுப்பிலிருந்து தங்கள் பள்ளிகளை விடுவிக்க வேண்டும்,' என கடிதம் அனுப்பி வருகின்றன. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது, என்றார்.

ஒரே நாளில் 2 தேர்வுகள்இதுபோல் எம்.இ., எம்.சி.ஏ., உட்பட முதுகலை படிப்பிற்காக நடத்தப்படும்
'டான்செட்' நுழைவு தேர்வு மே 20ல் நடக்கிறது. அதே நாளில் டி.என்.பி.எஸ்.சி., (கம்பைண்ட் இன்ஜினியர்ஸ் சர்வீஸ்) தேர்வும் நடக்கிறது. இதனால் பி.இ., படித்தவர்கள் குழப்பத்தில் உள்ளனர். அவர்கள், ''டி.என்.பி.எஸ்.சி., தேர்வை மற்றொரு நாளில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.