6, 9ம் வகுப்புக்கு தரம் உயர்த்தப்பட்ட புதிய பாடப்புத்தகங்கள் தயார்!!!

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல், பாடத்திட்டம் மாற்றப்படுவதையொட்டி 6,9ம் வகுப்புகளுக்கான புதிய பாடபுத்தகங்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு, சென்னையில் இருந்து அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
இவை மாணவர்களை கவரும்  வகையில் அனைத்து பக்கமும் கலரில் அச்சடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்  வரும் கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பு, 6, 9மற்றும்  11ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இதற்காக  கல்வியாளர் குழு மூலம் புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு  எழுதப்பட்டுள்ளது. கடந்த 5 மாதமாக புதிய பாடங்கள் எழுதும் பணி, சென்னையில் நடைபெற்றது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டங்களிலும் இருந்து திறன்வாய்ந்த  ஆசிரியாகள் சென்னைக்கு அழைக்கப்பட்டு, புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 6 மற்றும் 9ம் வகுப்புக்கு  முதல் பருவத்துக்கான தமிழ், ஆங்கிலம் புத்தகம் அச்சடிக்கப்பட்டு மாவட்ட  கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த புத்தகங்கள் நாமக்கல்  மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மாவட்ட கல்வி அலுவலகத்தில்  வைக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையை தொடர்ந்து வகுப்புகள் தொடங்கும்போது இந்த  புதிய புத்தகங்கள் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.
6 மற்றும் 9ம்  வகுப்புக்கு அச்சடிக்கப்பட்டுள்ள புதிய தமிழ், ஆங்கில புத்தகங்கள் பார்ப்பதற்கு சிபிஎஸ்இ பாடப்புத்தகம் போல இருப்பதாக ஆசிரியர்கள் கூறினர்.
கடினமான பேப்பரில் புத்தகத்தின் அட்டை இடம் பெற்றுள்ளது. புத்தகத்தின் அனைத்து  பக்கங்களும் கலரில் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. பாடத்துக்கு தேவையான  குறிப்புகள், படங்கள் என அனைத்தும் மாணவ, மாணவியரை எளிதில் கவரும் வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் திறக்கப்படும்  முன்பு அனைத்து வகுப்புக்கும் தேவையான புதிய புத்தகங்கள் வந்து  சேர்ந்துவிடும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.