அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங் விதிகள் வரும் 2ல் அறிவிக்கப்பட உள்ளன

அண்ணா பல்கலையின், இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங்கிற்கான விதிகள், மே, 2ல், அறிவிக்கப்பட உள்ளன. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பு களில் சேர, தமிழக அரசு சார்பில், ஒற்றைச்சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல், ஆன்லைனில் கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 


மாணவர்கள் வீட்டில் இருந்தபடி அல்லது அந்தந்த மாவட்ட உதவி மையங்கள் வாயிலாக, கணினி வழி ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். கவுன்சிலிங்கிற்கான ஆன்லைன் பதிவு, மே, 3ல் துவங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது. ஆனால், அறிவிக்கையில் இடம் பெற வேண்டிய கவுன்சிலிங் விதிகள் உள்ளிட்ட, மற்ற விபரங்கள் இடம் பெறவில்லை. கவுன்சிலிங் விதிகள் குறித்த விபரங்கள், வரும், 2ம் தேதி வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது. 

வழக்கமாக, அறிவிக்கை வெளியிடும் போது, அதில் அனைத்து விபரங்களும், விதிகளும் இடம்பெறும். அதை பின்பற்றி, கவுன்சிலிங் பதிவுக்கு தேவையான ஆவணங்களை, மாணவர்கள் முன்கூட்டியே தயார் செய்வர்.ஆனால், இந்த ஆண்டு, முதல் முறையாக, ஆன்லைன் கவுன்சிலிங்குக்கு மாறுவதால், விதிகளை இறுதி செய்வதில், உயர்கல்வித் துறைக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே அமைச்சரும், செயலரும் அறிவித்த கவுன்சிலிங் தேதி மற்றும் ஆன்லைன் பதிவு தேதி மட்டுமே, அறிவிக்கையாக வெளியிடப்பட்டு உள்ளது. 'மற்ற விபரங்கள், மே, 2ல் நிச்சயம் வெளியாகும்' என, அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் குழுவினர் தெரிவித்தனர்.