2017-18 கல்வி ஆண்டுக்கான அரசு
பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் தொடங்கின. கடந்த மாதம் 1-ந்தேதி பிளஸ்-2
பொதுத்தேர்வு தொடங்கி கடந்த 6-ந்தேதி வரையிலும் நடந்தது. இந்த தேர்வினை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 792
மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். இதேபோல பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு
மார்ச் 7-ந்தேதி தொடங்கி கடந்த 16-ந்தேதி வரை நடந்தது. இந்த தேர்வினை 8
லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மார்ச் மாதம்
16-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து சீரான இடைவெளியில் தேர்வுகள் நடைபெற்று
வந்தது. எஸ்.எஸ்.எல்.சி. இறுதித் தேர்வான சமூக அறிவியல் தேர்வு நேற்று
நடந்தது. சமூக அறிவியல் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக தேர்வு
எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். இதனால் அவர்கள்
மகிழ்ச்சியில் திளைத்தனர்.
பொதுத்தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்த
நிலையில் தேர்வு எழுதி முடித்துவிட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள்
உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர்
வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு விடைப்பெற்று சென்றனர்.
ஒட்டுமொத்தமாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை
மட்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள்
எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நேற்று நடந்த சமூக அறிவியல்
தேர்வில் காப்பி அடித்ததாக 10 பேர் பிடிபட்டனர். இதில் 8 பேர் விழுப்புரம்
மாவட்டத்தையும், 2 பேர் திருச்சியையும் சேர்ந்தவர்கள்.
பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி
ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 16-ந்தேதி பிளஸ்-2
தேர்வு முடிவுகளும், 23-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளும்,
30-ந்தேதி பிளஸ்-1 தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என்று கல்வித்துறை
அறிவித்துள்ளது.
இந்த கல்வி ஆண்டில்தான் முதல் முறையாக
பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டு, நடந்து முடிந்துள்ளது
குறிப்பிடத்தக்கது. பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் உயர் படிப்பு
தொடர்பான எதிர்பார்ப்புடன் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி மாணவ-மாணவிகள்
காத்திருக்கின்றனர்.
இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்கள்
நேற்றுடன் முடிவடைந்து இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. கோடை
விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.