பிளஸ்-2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி மே 16-ந் தேதி வெளியாகும் அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர்கள் போராட்டம் சரிசெய்யப்பட்டுவிட்டது. பிளஸ்-2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி மே 16-ந் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

திருச்சியில் நடைபெறும் நீட் மற்றும் போட்டித்தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்வதற்கான பயிற்சி முகாமை நேற்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அடுத்த மாதம் வெளியிடப்படும். மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாட புத்தகங்கள் பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களிடம் வழங்கப்படும்.

மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் நடத்தி வந்த பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு போராட்டம் சரிசெய்யப்பட்டுவிட்டது. எனவே பிளஸ்-2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி மே 16-ந் தேதி வெளியிடப்படும். இந்த ஆண்டும் எஸ்.எம்.எஸ். மூலமும் தேர்வு முடிவை தெரிந்துகொள்ளலாம். இதற்காக மாணவர்களின் செல்போன் எண்களை வாங்கிவைத்துள்ளோம்.

திறன் மேம்பாட்டிற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூலம் ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. பள்ளிகள் திறந்ததும் இந்த பயிற்சி அளிக்கப்படும்.

கோடைகால விடுமுறையின்போது பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்தவர்கள் தவிர, வேறு எந்த வகுப்பு மாணவர்களுக் கும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. இந்த உத்தரவை மீறி யாராவது செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.