மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை: ‘கட்-ஆப்’ மதிப்பெண்கள் 15 சதவீதம் குறைப்பு, மத்திய அரசு அதிரடி

நாடு முழுவதும் எம்.டி., எம்.எஸ்., டி.என்.பி., ஆகிய மருத்துவ மேற்படிப்பு, டி.எம்., எம்.சி.எச்., ஆகிய சிறப்பு உயர் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை ‘நீட்’ தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது.இந்த நிலையில், இப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ‘கட்-ஆப்’ மதிப்பெண்களை 15 சதவீதம் குறைத்து மத்திய அரசு சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் முடிவு எடுத்து உள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், “இதன்மூலம் காலி இடங்களை நிரப்புவதில் முன்னேற்றம் ஏற்படும். இடங்கள் வீணாகாமல் தடுக்கப்படும்” என சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார மந்திரி ஜே.பி. நட்டா கூறுகையில், “மருத்துவ துறையை வலுப்படுத்துவதில் இது குறிப்பிடத்தகுந்த ஒரு நடவடிக்கை ஆகும். சுகாதார துறைக்கு அரசு முக்கியத்துவம் அளிப்பதை இது எடுத்துக்காட்டுகிறது. தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் போதுமான மனித சக்தி இருப்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்” என குறிப்பிட்டார்.மருத்துவ மேற்படிப்பிலும், சிறப்பு உயர் மருத்துவ படிப்பிலும் ‘கட்-ஆப்’ மதிப்பெண்களில் 15 சதவீதம் குறைத்து இருப்பதின் மூலம் 18 ஆயிரம் பேர் பலன் அடைவர் என தகவல்கள் கூறுகின்றன.