10ம் வகுப்பு கணித தேர்வில் கடினமான கேள்விகள்

நேற்று நடந்த, 10ம் வகுப்பு, கணித தேர்வில், வினாக்கள் மிக கடினமாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று கணித தேர்வு நடந்தது. 10 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வறைக்குள், மகிழ்ச்சியுடன் சென்ற மாணவர்கள், கவலையுடன் வெளியே வந்தனர். கேள்விகள் மிக கடினமாக இருந்ததாக கூறினர்.


அவர்கள் கூறியதாவது: ஒரு மதிப்பெண் கேள்விகள், 20 மதிப்பெண்களுக்கான, வரைபட கேள்விகள் மற்றும் சில இரண்டு மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்ததால், தேர்ச்சி பெறுவதில் சிரமம் இருக்காது. ஆனால், நன்றாக படித்து, அதிக மதிப்பெண் பெற வேண்டும்; 'சென்டம்' என்ற, 100 மதிப்பெண் பெற நினைத்த மாணவர்களால், 80 மதிப்பெண் எடுப்பதே கடினம். பாடங்களை முழுவதுமாக படித்திருந்தால், 90 மதிப்பெண்கள் பெற முடியும். மிக சிலரே, அதிகபட்ச மதிப்பெண் பெற முடியும் என, தெரிகிறது. மறைமுகமான, சிந்திக்க வைக்கும் வகையில், 25 மதிப்பெண்களுக்கு, கேள்விகள் இடம் பெற்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை, வண்ணாரப்பேட்டை, பி.ஏ.கே.பழனிசாமி மேல்நிலை பள்ளி, கணித ஆசிரியர், சுரேஷ் கூறுகையில், ''கணித தேர்வில் தரமான கேள்விகள் இடம்பெற்றன. ஆனால், பல பள்ளிகளில், இதுபோன்ற, 'கிரியேட்டிவ்' கேள்விகளுக்கு, பயிற்சி அளித்திருப்பது சந்தேகம் தான்.''புத்தகம் முழுவதையும் படித்து, உதாரண வினாக்களை புரிந்து, பயிற்சி பெற்றிருந்தால், 90க்கும் மேல் மதிப்பெண் பெறலாம்,'' என்றார்.