ஏர்வாடி பள்ளி ஆண்டுவிழாவில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு கண் பாதிப்பு: பள்ளி தாளாளர் கைது

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் நேற்று நடந்த தனியார் பள்ளி ஆண்டு விழாவில், கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் பள்ளி தாளாளர் பாலசுப்ரமணியன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் நேற்று இரவு ஆண்டு விழா நடந்தது. மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் இதில் பங்கேற்றனர். விழாவிற்காக சக்தி வாய்ந்த மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
விழா முடிந்த நிலையில், இன்று காலையில் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு கண்ணில் வீக்கம், எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, 60 மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்கைகாக அனுமதிக்கப்பட்டனர்.
அதிக வெளிச்சம் காரணமாக கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 2 நாளில் இது சரியாகிவிடும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக ஒளி, ஒலி அமைப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது ஏர்வாடி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி தாளாளர் பாலசுப்ரமணியன் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.