விளம்பி - தமிழ்ப் புத்தாண்டு: முதல் நான்கு ராசிகளுக்கான பலன்கள்

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!
இந்த விளம்பி தமிழ்ப் புத்தாண்டு சித்திரை 1 ஆம் தேதி (14.04.2018) சனிக்கிழமை, திரயோதசி, உத்திரட்டாதி நட்சத்திரம், ஐந்திரம் நாம யோகம், பத்திரை கரணத்தில் காலை 08.16 மணிக்கு செவ்வாய் ஹோரையில் ரிஷப லக்னத்தில் மீன நவாம்சத்தில் பிறக்கிறது.

லக்னம் மற்றும் ஆறாம் வீடான ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானத்திற்கும் அதிபதியான சுக்கிரபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுய சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத்திரிகோண ராசியான துலாம் ராசியை அடைகிறார். தனம் வாக்கு குடும்பம் ஆகிய இரண்டாம் வீட்டிற்கும் பூர்வபுண்ணியமாகிய ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் லாப ஸ்தானத்தில் நீச்சம் பெற்று சந்திர கேந்திரத்தில் அமர்ந்திருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார்.
ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்திற்கும் பத்தாம் வீடான கர்ம ஸ்தானத்திற்கும் அதிபதியான சனிபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் லாப ஸ்தானத்தில் சனிபகவானின்சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் கேதுபகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) உச்சம் பெற்று வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமர்ந்திருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார். தன பூர்வபுண்ணியாதிபதியான புதபகவான் லாப ஸ்தானத்தில் சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) நீச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார்.
சப்தமம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய்பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சுக்கிரபகவான் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். அஷ்டம லாபாதிபதியான குருபகவான் ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். தர்மகர்மாதிபதியான சனிபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.
ராகுபகவான் தைரிய ஸ்தானத்தில் புதபகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். கேதுபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார்.
இந்த விளம்பி வருடத்தில் நிகழ இருக்கும் முக்கிய நிகழ்வுகள்
* மருத்துவ பொருள்கள் பல்கிப் பெருகும். ரசாயனம், மின்சாரம், வான சாஸ்திரம், மருந்துவகை, கணிதபொருள் உற்பத்தி ஆகியவற்றில் நாடு சிறந்து விளங்கும்.
* அரசியல் நல்ல நிர்வாகத்தை ஏற்று நடத்தக் கூடியதாக இருக்கும்.
* உள்நாட்டு பொருள்களின் உற்பத்தியும் திருப்திகரமாக இருக்கும்.
* பொருளாதாரமும் பற்றாக்குறையின்றி சரளமாக அமையும்.
* விளையாட்டு போட்டிகளிலும் மிதமான வெற்றி கிடைக்கும்.
* பெட்ரோலியம், நிலக்கரி சம்பந்தமான பிரச்னைகளையும் மின்சார பற்றாக்குறை ஆகியவை சில நேரங்களில் ஏற்படலாம். இருப்பினும் வெளிநாட்டிலிருந்து எரிபொருள் உற்பத்தி கணிசமாக உயர்ந்து எரிபொருள் பற்றாக்குறையை ஈடுசெய்யும்.
* இந்திய விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சி செய்து கண்டு பிடிப்பார்கள். தெய்வ சிந்தனை, நல்லொழுக்கம் பற்றிய அக்கறை எல்லோரிடமும் ஏற்படும்.
* பால்பண்ணை, கால்நடை உற்பத்தி ஆகியவைகளுக்கு முக்கிய அந்தஸ்து கிடைக்கும்.
* நமது நாட்டில் பல தொழிற்சாலைகள் திறக்கப்படும். மூடிக்கிடந்த மில்களும் ஸ்தம்பித்த நிலையிலிருந்த தொழில்களுக்கும் அரசாங்கத்தின் பேராதரவு கிடைக்கும்.
* நமது நாட்டிலுள்ள கட்சிகளின் பூசல்கள் மறைந்து எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்கிற சித்தாந்தம் பரவ ஆரம்பிக்கும்.
* இந்த ஆண்டு கல்வியில் பெரும்பாலானோர் தோர்ச்சி பெறுவார்கள்.
* இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் இந்த ஆண்டு பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும்.
* விவசாயத்திற்குரியவர், மழைக்கோளான சுக்கிரபகவானாவார். அவருடைய லக்னத்தில் இந்த ஆண்டு தொடங்கி இருப்பதால் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கண்டு பொருளாதாரத் துறையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
* சூரியன் மேகாதிபதியாக ஆவதால் இவ்வருடத்தில் நல்ல மழை பெய்யும்.
* சுக்கிரபகவான் மழைக்கோள் ஆனபடியாலும் அவர் பெற்றுள்ள சுப பலத்தால் நீர்ப்பாசனங்களும் நல்ல விதத்தில் அமையும். ஏரி, குளம், கண்மாய் முதலிய இடங்களில் போதுமான நீர்த்தேக்கம் உண்டாகும்.
* நஞ்சை,புஞ்சை, தானியங்கள் சிறப்பாக விளையும். நெல் உற்பத்தியும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்.
* சினிமாத்துறை, சங்கீதம், நாடகம், விளம்பரம், ஊடகத்துறை, மக்கள் தொடர்பு முதலிய சகல துறைகளிலும் பெரியதொரு முன்னேற்றம் ஏற்படும்.
* பழ வகைகள், காய்கறிகள், அன்றாடம் அழியக்கூடிய, உண்ணக்கூடிய பொருள்களை வியாபாரம் செய்வோருக்கு வியாபாரம் செழித்தோங்கும். அவர்கள் மிகுந்த லாபம் அடைவார்கள்.
* வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரசாங்கத்திலிருந்து உதவித்தொகையும் கிடைக்கும்.

மேஷம்
(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் புதிய முயற்சிகளைத் திறம்படச் செயல்படுத்துவீர்கள். செய்தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சியைப் பார்ப்பீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்த எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உடல் ஆரோக்கியம் சீராகி மருத்துவச் செலவுகள் குறையும். வெளிவட்டாங்களில் உங்கள் பெயர் புகழ் உயர்ந்து செல்வாக்கு அதிகரிக்கும். உடன்பிறந்தோருக்கிடையே இருந்த பிணக்குகள் மறைந்து ஒற்றுமை கூடக் காண்பீர்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியமும் குடும்பத்தில் பேரக்குழந்தை பாக்கியமும் கிடைக்கும். மந்தமாக இருந்த குழந்தைகள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்குவார்கள். பழைய சொத்துகளை விற்றுவிட்டு புதிய சொத்துகளை வாங்கும் வாய்ப்புகளும் சிலருக்குக் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பிரயாணங்களால் எதிர்பாராத செலவினங்களும் ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் அதற்காக சிறிது சேமித்து வைத்துக் கொள்ளவும். அதேநேரம் இந்த பயணம் சுபகாரியங்களுக்காக நிகழும் என்பதால் மனதில் மகிழ்ச்சிக்குக் குறைவராது. மேலும் சிலருக்கு தர்ம காரியங்களில் ஈடுபட்டு பிரபலமடையும் யோகமும் உண்டாக பாக்கியமுள்ளது.
இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் தேவைக்கேற்ற பணவரவு கிடைக்கும். பழைய கடன்களை அடைக்கத் தொடங்குவீர்கள். செய்தொழிலில் திடீர் திருப்பங்களைக் காண்பீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் சற்று விலகி இருந்தாலும் விட்டுக்கொடுத்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்த சலுகைகள் கிடைத்துவிடும். குலதெய்வ வழிபாட்டினைச் செய்வீர்கள். முக்கிய தருணங்களில் உங்கள் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். வெளியூரிலிருந்து அனுகூலத் தகவல் ஒன்று வந்து சேரும். குறிப்பாக, இது குழந்கைளுக்கு நன்மையாக அமையும். வெளியூர் சென்று செய்தொழிலை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் சிறப்பாக வெற்றி பெறும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களிலிருந்து வருமானம் வரத்தொடங்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பார்கள். மேலும் சில நேரங்களில் காரணமில்லாமல் அதைரியப்படுவீர்கள். ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக வேலைகள் சம்பந்தப்பட்ட பயணங்களால் நன்மை உண்டாகும். பணவரவுக்குக் குறைவு வராது. தன்னம்பிக்கை கூடும். பதவி உயர்வு எதிர்பார்க்கமாலேயே கிடைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் மனக்கஷ்டம், பணக்கஷ்டமும் உண்டாகும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். கடன்கள் வசூலாவதற்குத் தாமதமாகும். அதனால் புதிய கடன்களைக் கொடுக்க வேண்டாம். வியாபாரத்தில் உங்கள் கௌரவம், அந்தஸ்து கூடும். கூட்டாளிகளை நம்பி எதையும் செய்ய வேண்டாம். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் குறைவாகவே தெரியும். அதனால் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்வதன் மூலம் வருமான இழப்பை ஈடு செய்யவும். இக்காலத்தில் நீர்வரத்தும் மிகக்குறைவாக இருப்பதால் பாசன வசதிகளுக்காக சேமிப்புகளை எடுத்து செலவு செய்ய நேரிடும்.
அரசியல்வாதிகளுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். தொண்டர்களின் அதிருப்தியையும் சந்திக்க நேரிடும். பொறுமையுடன் நடந்து கொள்ளவும். சமுதாயத்தில் அந்தஸ்தான பதவிகள் தேடிவரும். உங்களின் பணியாற்றும் திறனைக் கட்சி மேலிடம் கவனிக்கும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் சுமாராக இருந்தாலும் பணவரவு சீராகவே தொடரும். ரசிகர்களின் ஆதரவு எதிர்பார்த்த அளவிலேயே இருக்கும். உங்கள் செயல்களில் உங்களின் தனித் திறமையை வெளிக்கொணரும் ஆண்டாக இது அமைகிறது. பெண்மணிகளுக்கு கணவன் மனைவி வகையில் விரிசல்கள் ஏற்படாமல் கவனமாக இருக்கவும். உடன்பிறந்தவர்களின் சிறுசிறு பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரியும் ஆண்டாகும்.
பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.
ரிஷபம்
(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்களும் எதிர்பாராத முன்னேற்றங்களும் உண்டாகும். மேலும் செய்தொழிலில் புதகிய அனுபவங்களைப் பெறுவீர்கள். வெளியில் சொல்ல முடியாத உடல் உபாதைகளிலிருந்து மீண்டு வந்து விடுவீர்கள். அசையா சொத்துக்களுக்கு ஏற்பட்ட வழக்குகள் சாதகமான தீர்ப்பை நோக்கிச் செல்லும். நெடுநாளாக விலகியிருந்த உற்றார் உறவினர்கள் மறுபடியும் குடும்பத்ததுடன் இணைவார்கள். உங்களின் புதிய செயல்களுக்கு புதிய நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனங்கள் வாங்கும் யோகங்கள் உண்டாகும். மேலும் சமூகத்தில் பிரபலமானவர்களும் நண்பர்களாவார்கள். வீடு மாற்றம் செய்ய நினைத்தவர்கள் இந்த காலகட்டத்தில் அதை செய்யலாம். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தாருடன் புதிய ஆலயங்களுக்கும் சென்று வருவீர்கள். பணவரவு சரளமாக இருப்பதால் தர்மகாரியங்களிலும் உங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள். பொதுச் சேவையில் முன்னேற்றங்கûள் உண்டாகலாம். அலைந்து திரிந்து செய்த காரியங்கள் சுலபமாக முடிவடையும். மற்றபடி அதிகமாக முயற்சி செய்யமலேயே சுகங்கள் அனுபவிக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என்றாலும் மிகையாகாது.
இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்கள் செயல்கள் அனைத்தும் ராஜபாட்டையில் செல்ல விசா எதிர்பார்க்கின்றவர்களுக்கு விசா கிடைத்து வெளிநாடு பயணிப்பார்கள். பெற்றோர்கள் மற்றும் உடன்பிறந்தோருகளுக்கிடையே ஏற்பட்ட சிற்சில பிரச்னைகள் தானாகவே தீந்துவிடும். அதேநேரம் அனைவரிடமும் நிதானமாக பேசிப்பழகுவீர்கள். இதனால் உங்கள் பெயர் புகழ் அந்தஸ்து சமுதாயத்தில் கூடத் தொடங்கும். உங்கள் செயல்களில் விழிப்புடன் இருந்து வருமானத்தைப் பெருக்குவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் மேம்பட யோகா செய்யவும். நெடு நாளாக ஒதுக்கி வைத்திருந்த காரியங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள், பொருளாதாரத்தில் பற்றாக்குறை என்று எதுவும் ஏற்படாமல் இருக்கும் காலகட்டமாக இது அமையும் என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு சக ஊழியர்களின் ஆதரவினால் வேலை குறையும். ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளும் படியாக இருக்கும். தயக்கமின்றி உங்கள் எண்ணங்களை மேலதிகாரிகளிடம் எடுத்துக் கூறுவீர்கள். வியாபாரிகளுக்கு முயற்சிகளுக்குத் தகுந்த லாபங்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த சிரமங்கள் குறையும். அனைத்துச் செயல்களும் தடைகளுக்குப்பிறகே வெற்றியைக் கொடுக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் பெரிய கடன்கள் சேர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும். வியாபாரிகளுக்கு கூடுதல் விளைச்சலைக் காண்பார்கள். தரமிக்க விதைகளை வாங்கி மகசூலை இருமடங்காக்கும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். உபரி வருமானங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.
அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். கட்சிமேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். மக்களுக்கு நலம் செய்யும் உங்கள் முயற்சிகளை எதிர்க்கட்சியினரும் பாராட்டுவார்கள். கலைத்துறையினருக்கு செய்யும் விடாமுயற்சிகள் பெரும் வெற்றியைத் தரும். அதிக முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்சதங்கள் கிடைக்கும். ஆனாலும் உங்களை குறைசொல்லும் சக கலைஞர்களைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். பணியில் கவனம் செலுத்தவும். பெண்மணிகளுக்கு கணவரின் அன்பும் பாசமும் அதிகரிக்கும். சுற்றுலா சென்று மன மகிழ்ச்சியைக் கூட்டிக்கொள்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்து காணப்படும். பிள்ளைகளாலும் சந்தோஷம் நிறையும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயர்ந்து காணப்படும். மாணவமணிகள் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகம் பாடுபட்டு படித்தால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். எனினும் பெற்றோர்கள் தேவையான ஆதரவைத் தருவார்கள். உற்சாகத்துடன் விளையாட்டில் ஈடுபடுவீர்கள்.
பரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டு சிறப்புகளைக் கூட்டிக் கொள்ளுங்கள்.
மிதுனம்
(மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் அனைத்துச் செயல்களிலும் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். உங்கள் கௌரவம், அந்தஸ்து ஆகியவை படிப்படியாக உயரத்தொடங்கும். முக்கியமான விஷயங்களில் பெற்றோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன்பிறந்தோரை விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் போட்டியாளர்கள் அடங்கியே இருப்பார்கள். செய்தொழிலை விரிவுபடுத்த சிறிய தூரப்பயணங்களை அடிக்கடி செய்ய வேண்டி வரும். பொருளாதாரம் சிறப்பாகவே செல்லும். பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகளும் தேடி வரும். அரசாங்கத்திடமிருந்து, கெடுபிடிகள் என்று எதுவும் ஏற்படாது. அதேநேரம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அவசரப்பட்டு முன்யோசனையின்றி எவரிடமும் பேசவேண்டாம். மேலும் இந்த காலகட்டத்தில் தற்பெருமை கூடாது.
இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் ஆக்கபூர்வமான விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும். செலவினங்கள் கட்டுக்குள்ளேயே இருக்கும். இதுவரை விலை போகாமலிருந்த மண் மனைகள் நல்ல விலைக்கு விற்பனை ஆகும். அரசாங்க அதிகாரிகளும் ஆதரவாக இருப்பார்கள். உங்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும். அநாவசியமாக எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். இதனால் வீண்பழிகளுக்கு ஆளாக நேரிடும். மற்றபடி மன தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். விருந்து கேளிக்கைகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். எல்லா விஷயங்களிலும் முன்னதாக திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்கள் பயணங்களால் சில அனுகூல திருப்பங்களைக் காண்பீர்கள். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலாகிச் செல்லும் நிலை ஏற்படும். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாகவே நடந்துகொண்டாலும் தொல்லைகள் கொடுக்க மாட்டார்கள். சக ஊழியர்களும் ஒத்துழைப்பு நல்குவார்கள். பதவி உயர்வு உரிய நேரத்தில் வந்து சேரும். சோம்பலுக்கு இடம்தர கூடாது. வியாபாரிகள் வியாபாரத்தில் வளர்ச்சியைக் காண்பார்கள். தொடர்ந்து வளர்ந்த தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவு பெருமளவுக்கு இருப்பதால் கூட்டுத்தொழில் சிறப்பாக நடக்கும். புதிய முதலீடுகள் செய்து கடையை விரிவுபடுத்துவீர்கள். இந்த ஆண்டு கொஞ்சம் நலம் தரும் திருப்பங்களைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். விவசாய உபகரணங்களுக்கு சற்று கூடுதல் செலவு செய்ய நேரிடலாம். புதிய நிலங்கள் குத்தகைக்கு வந்து சேரும். போட்டிக்கு தகுந்த விலையை நிர்ணயிப்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் தைரியமும் செயல்படும் ஆற்றலும் கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கட்சித்தலைமையிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பைக் காண்பீர்கள். சமூகத்தில் உங்கள் செயல்களுக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும். பெயர் புகழ் கூடும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். பெயரும் புகழும் கூடும். ரசிகர்கள் உங்களை அலட்சியப் படுத்தினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரசிகர் மன்றங்களுக்கு பணம் செலவு செய்வீர்கள். பெண்மணிகளுக்கு பணவரவு நன்றாக இருப்பதால் ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். இதனால் சுப விரயங்கள் உண்டாகும். கணவருடன் ஒற்றுமையோடு நடந்து கொள்ளுவார்கள். கணவரும் உங்களை மதித்து நடத்துவார். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பெற்றோர்களின் ஆதரவு கிட்டும். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவார்கள். உடல்நலம் பலப்படும்.
பரிகாரம்: துர்க்கையையும் நவக்கிரகங்களையும் பிரதட்சணம் செய்யுங்கள்.
கடகம்
(புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் விருப்பம்போல் செய்தொழிலை மாற்றியமைப்பீர்கள். செய்தொழிலில் இருந்த பிரச்னைகள் யாவும் படிப்படியாக நிவர்த்தியாகி மனநிம்மதி உண்டாகும். சிலர் செய்தொழிலை சொந்த இடத்திற்கு மாற்றுவார்கள். குழந்தைகளின் கல்விக்காக மகிழ்ச்சியுடன் செலவழிப்பீர்கள். அவர்களால் குடும்பத்தின் அந்தஸ்து உயரும். பணவரவு எதிர்பார்த்ததிற்கும் மேலாகவே வரும். இல்லத்தில் சந்தான பாக்கியம் உண்டாகும் தீர்க்கமாக சிந்தித்து சிறப்பாக முடிவெடுப்பீர்கள். உங்கள் முயற்சிகள் எதுவும் வீண் போகாது. சிலர் பழைய வாகனங்களை விற்றுவிட்டு புதிய நவீன வாகனங்களை வாங்குவார்கள். நண்பர்களுடனும் கூட்டாளிகளுடனும் இணைந்து காரியமாற்றுவீர்கள். உங்கள் எண்ணங்களை செய்தொழிலில் நடைமுறைப்படுத்துவீர்கள். அதனால் உண்டாகும் நற்பலன்களை கண்கூடாகவும் பார்ப்பீர்கள். கைவசம் உள்ள பொருள்களை செம்மைப்படுத்திக் கொள்வீர்கள். அதேநேரம் உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் சிறிது பகைமை, விரோதம் ஆகியவைகளைக் கொண்டிருப்பதால் அதற்கு ஏற்ப எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.
இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் எவரிடமும் எதிர்வாதம் செய்யாமல் விட்டுக்கொடுத்து மாற்றங்கள் உண்டாகி அதன்வழியே நல்ல செல்வம், செல்வாக்கு ஆகியவை பெறுவதற்கு வழி உண்டாகும். நெடுநாளாக வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொண்டவர்கள் சுயமாக செயல்படத் தொடங்குவார்கள். தாமாகவே நல்ல முடிவுகள் எடுத்து சிறப்பாக வெற்றிபெறுவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சுலபமாக நடந்தேறிவிடும். மனதிற்கினிய பிரயாணங்களைச் செய்து அதன்மூலம் ஆதாயங்களைப் பெறுவீர்கள். இல்லத்தில் முத்தான புத்திரப் பேறு உண்டாகும். தெய்வ காரியங்களில் ஈடுபடுவதற்கும் புனிதமான தீர்த்த யாத்திரைகள் மேற்கொள்வதற்கும் தகுந்த காலகட்டமாக அமைகிறது. வெளிநாடு சென்று வர முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைத்துவிடும். உங்களின் உள் உணர்வு சிறப்பாக வேலைசெய்யும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்கள் அனைவரிடமும் சுமுகமாகப் பழகுவார்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடிவரும். தடைபட்டிருந்த ஊதிய உயர்வு உங்களுக்குக் கிடைக்கும். மேலும் உடலில் சிறிது சோர்வு காணப்படுவதால் சுறுசுறுப்பு குறையும். வியாபாரிகளுக்கு போட்டிகள் குறையும். வியாபாரத்தில் லாபங்கள் வரும். நண்பர்களையும் வாடிக்கையாளர்களையும் அரவணைத்துச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த தொய்வுகள் நீங்கி, மனதில் உற்சாகம் தோன்றும். கொடுத்த இடத்திலிருந்து பணம் திரும்பிவராமல் தங்கிவிட நேருமாகையால் புதியவர்களை நம்பி கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக, கால்நடை வைத்திருப்போர் எதிர்பார்த்த லாபத்தை அடைவர். நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்ள முயற்சிகளைச் செய்வீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப் படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல்ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அடிக்கடி பிரயாணங்களைச் செய்வீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வதில் சில தடைகள் ஏற்படலாம். வருமானம் சீராக இருக்கும். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சுப காரியங்களிலும் பங்கு கொள்வீர்கள். உடல்சோர்வும் சில நேரங்களில் உண்டாகும். மாணவமணிகள் பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள். பெற்றோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பார்கள். உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு சிறப்படையுங்கள்.