புதுடில்லி: கல்வி கற்கும்
உரிமை சட்டத்தை,
நாட்டில், 8 சதவீத
பள்ளிகள் மட்டுமே
பின்பற்றும் தகவல்
வெளியாகியுள்ளது. சமூக
நல அமைப்புகளின்
கூட்டமைப்பு, கல்வி
கற்கும் உரிமை சட்டம்
குறித்த மாநாட்டை,
டில்லியில் நேற்று
நடத்தியது.
முறையான பயிற்சி : இதில், 20 மாநிலங்களில் இருந்து, அரசு சாரா அமைப்புகளை சேர்ந்த, 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த
கூட்டத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவு விபரம்:நாட்டின் மொத்த உள்நாட்டு
உற்பத்தியில், 3 சதவீதம் மட்டுமே, கல்விக்காக செலவிடப்படுகிறது. ஆனால், 6 சதவீதம்
செலவிடப்பட வேண்டும் என, உலக நாடுகள் கூறுகின்றன. உலகின் நடுத்தர வருவாய் உள்ள
நாடுகளில், செலவிடப்படுவதை விட, நான்கு மடங்கு குறைவாக, கல்விக்கான தனி நபர்
செலவினம், இந்தியாவில் உள்ளது.
பள்ளி ஆசிரியர்களில், 20 சதவீதம் பேர், முறையான பயிற்சி பெறாதோர். கல்வி
மையங்களில், வளர்ச்சிக்கான கல்வியின் தேவை உள்ளது. இதற்காக, பல்வேறு சீர்திருத்த
சட்டங்கள் இயற்றப்பட்டபோதும், அவற்றை அமல்படுத்துவதில், அரசுகள் அலட்சியமாக உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆலோசனை : மாநாட்டில் பேசிய, உச்ச நீதிமன்ற நீதிபதி, மதன் பி.லோகுர்
கூறியதாவது:இந்தியாவில் உள்ள பள்ளிகளில், 8 சதவீதம் மட்டுமே, கல்வி உரிமை சட்டத்தை
பின்பற்றுகின்றன. இந்த சட்டம், மிகுந்த ஆலோசனைகளுக்கு பின் இயற்றப்பட்டது. ஆனால்,
இதை செயல்படுத்துவதில் மந்த போக்கு காணப்படுவதால், ஒரு தலைமுறை குழந்தைகள்,
அடிப்படை கல்வி அறிவு பெற முடியாமல் போகிறது. இந்தியாவில் கல்வியின் தரம், மிக
மோசமான நிலையில் உள்ளது. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல், கல்வியின்
தரத்தை உயர்த்த முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.