குழந்தை தொழிலாளர் பள்ளிக்கு மூடுவிழா அபாயம்::9 மாத சம்பளம், வாடகை வழங்காத அவலம்

குழந்தை தொழிலாளர் பள்ளிகளுக்கு வாடகையும்,ஆசிரியர்களுக்குசம்பளமும் வழங்காததால் பள்ளிகள் மூடும் அபாயத்தில் உள்ளன.கல்வியை தொடர முடியாமல் இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து, அவர்கள் கல்வியை தொடர தேசிய குழந்தை தொழிலாளர் பள்ளிகள் செயல்படுகின்றன. மாவட்டத்தில் 19 பள்ளிகளில் 360க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயில்கின்றனர். 


ஒவ்வொரு பள்ளியிலும் தொழில் கல்வி ஆசிரியர்கள், உதவியாளர்கள், கணக்காளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு 2016 முதல் சத்துணவு வழங்குவது நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இங்கு பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு9 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. பள்ளிகள் செயல்படும் கட்டங்களுக்கு வாடகையும் வழங்க வில்லை. குழந்தை திட்ட தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.500 வீதம் வழங்கப்பட்டதை இரண்டு ஆண்டுகளாக வழங்கவில்லை.


குழந்தை தொழிலாளர் நல பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அரசு சலுகைகள் மற்றும் நிதி ஒதுக்கீடை வழங்காததால் இப்பள்ளிகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. இதனால் குழந்தை தொழிலாளர்கள் மீண்டும் உருவாகும் நிலை ஏற்படும். இந்திய தொழிற்சங்க மைய தலைவர் முத்துராஜ், செயலாளர் கணேசன் ஆகியோர் ஆசிரியர், பணியாளர்களுடன் ஊழியர்கள் சம்பளம், பள்ளி வாடகை வழங்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.