மார்ச் 29, 30, 31 தேதிகளில் வருமான வரி அலுவலகங்கள் செயல்படும்

விடுமுறை நாள்களான மார்ச் 29, 30, 31 ஆகிய தேதிகளிலும் வருமானவரி அலுவலகம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: 2016-17 மற்றும் 2017-18-ஆம் ஆண்டுகளுக்கான தாமதிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கு மற்றும் 2016-17-ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கு ஆகியவற்றைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31 (சனிக்கிழமை) ஆகும். 2017-18 நிதியாண்டு நிறைவடையும் மார்ச் 31-ஆம் தேதி சனிக்கிழமை ஆகும். மேலும் மார்ச் 29, 30 ஆகிய தேதிகளும் விடுமுறை நாள்களாகும்.
இருப்பினும் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்யவும், அதனுடன் தொடர்புடைய பணிகளை நிறைவேற்றவும் வசதியாக இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வருமான வரித் துறை அலுவலகங்களும் மார்ச் 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் செயல்படும்.
இந்த நாள்களில் வருமான வரி சேவை மையங்களும் திறந்திருக்கும். வரி செலுத்துவோர் தங்கள் கணக்குகளைத் தாக்கல் செய்ய தேவையான உதவிகளை அளிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.