போலீஸ் எழுத்து தேர்வு 2.88 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை:தமிழக காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, இரண்டாம் நிலை காவலர்களாக, 6,140 பேரை தேர்வு செய்ய, நேற்று நடந்த எழுத்து தேர்வில், 2.88 லட்சம் பேர் பங்கேற்றனர்.

தமிழக காவல் துறையில், இரண்டாம் நிலை காவலர் துவங்கி, டி.ஜி.பி., வரை, 1.24 லட்சம் பணியிடங்கள் உள்ளன. அதில், தற்போது, 19 ஆயிரத்து, 803 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி இடங்களை நிரப்ப, தமிழக சீருடை பணியாளர் தேர்வு குழுமம்,இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும், எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்து வருகிறது.
'ஹால் டிக்கெட்'
இந்த ஆண்டு, காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, 6,140 பேரை தேர்வு செய்ய, 2017டிசம்பரில் அறிவிப்பு வெளியானது; ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்பட்டன.மொத்தம், 3.27 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; அவர்களுக்கு, ஆன்லைன் வாயிலாக, 'ஹால்டிக்கெட்' வினியோகிக்கப்பட்டது.இதையடுத்து, தமிழகம் முழுவதும், 32 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட, 232 மையங்களில், நேற்று எழுத்து தேர்வு நடந்தது. இதில், 2.88 லட்சம் பேர் பங்கேற்றனர். சென்னையில், 23 ஆயிரத்து, 295 பேர் தேர்வு எழுதினர்.
சென்னை அண்ணா பல்கலை தேர்வு மையத்தில், மாநகர போலீஸ் கமிஷனர், ஏ.கே. விஸ்வநாதன் ஆய்வு செய்தார். இதேபோல, மாநிலம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களை, அந்தந்த மாவட்ட, எஸ்.பி.,க்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்கள் ஆய்வு செய்தனர்.
கேள்வி எளிது
தேர்வு எழுதியோர் கூறுகையில், 'பொது அறிவு, 50; உளவியல் பாடப்பிரிவில், 30 என, 80 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், 28 மதிப்பெண்கள் எடுத்தால், தேர்ச்சி பெற்று விடலாம். கேள்விகள் மிக எளிதாக இருந்தன'என்றனர்.தேர்வு முடிவுகள், இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்ச்சி பெறுவோரில், ஒரு காலி இடத்திற்கு, ஐந்து பேர் என்ற அடிப்படையில், உடற்கூறு அளத்தல், உடற்திறன் போட்டி மற்றும் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர்.