பிளஸ் 1 கணக்கு தேர்வு கடினம்: மாணவி தற்கொலை

கணக்கு தேர்வு, கடினமாக இருந்ததால், பிளஸ் 1 மாணவி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர், பார்த்திபன் மகள், சர்மிளா, 16. இவர், சென்னை, செங்குன்றம், மொண்டியம்மன் நகர், கண்ணகி தெருவில் உள்ள, அவரது உறவினர், ஜெய்சங்கர் என்பவரது வீட்டில் தங்கி, பிளஸ் 1 படித்து வந்தார். சர்மிளா, நேற்று முன்தினம், கணக்கு தேர்வு எழுதினார்.
அதில், வினாக்கள் கடினமாக கேட்கப்பட்டிருந்ததால், மன உளைச்சலில் இருந்த சர்மிளா, நேற்று முன்தினம் மாலை, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து, செங்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அமைச்சர் விளக்கம் : ''பிளஸ் 1 தேர்வில், கணிதம், விலங்கியல் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகள், கடினமாக இருந்தது குறித்து, அதிகாரிகள் குழு ஆய்வு செய்யும்,'' என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.


இதுகுறித்து, அமைச்சர் செங் கோட்டையன் கூறியதாவது:பிளஸ் 1 தேர்வில், சில மாணவர்கள், வினாக்கள் கடினம் என்கின்றனர்; சில மாணவர்கள், தரமாக, எளிதாக உள்ளதாக கூறியுள்ளனர். அந்த தேர்வை, நாங்கள் கண்காணித்து கொண்டிருக்கிறோம். கேள்விகள் கடினம் என்றால், கருணை மதிப்பெண் வழங்குவோம் என, சொல்லி விட முடியாது. வினாத்தாள் எப்படி இருக்கிறது என்பதை, பள்ளிக் கல்வி துறையில் உள்ள அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தி, முடிவு எடுக்கும்.பள்ளி தேர்வுகளில், 'சென்டம்' எடுத்து, உயர் கல்வி செல்லும் மாணவர்களில் பலர், அண்ணா பல்கலையின் முதல் பருவ தேர்வில், கணித பாடத்தில், குறைந்த மதிப்பெண் பெறுகின்றனர்.எனவே, அவர்களை திறமையாளர்களாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக, நம் மாணவர்களுக்கு,சிறப்பு பயிற்சி அளிக்கலாமா என, யோசித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.