சென்னை: இந்திய
ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி அமைப்பின் மூலம் டிக்கெட் முன்பதிவுக்கு கடந்த
16 வருடங்களாக நடைமுறையிலிருந்த 'ஐ-டிக்கெட்' முறை, மார்ச் 1-ஆம் தேதி
முதல் செயல்படாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில்
பிரயாணம் செய்வதற்கு என்று இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி அமைப்பில்
டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள், தங்களுக்கான பயணச்சீட்டுகளை வீட்டிலேயே
பெற்றுக் கொள்ளும் ஐ-டிக்கெட்' முறையை ரயில்வே கடந்த 2002-ஆம் ஆண்டு
நடைமுறைப்படுத்தியது.
இதன் மூலம்
மின்னணு முறையில் பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளை 'பிரிண்ட் அவுட்'
எடுக்க வாய்ப்பு இயலாதவர்கள், வெளியூரில் இருக்கும் வேறொரு உறவினருக்காக
முன்பதிவு செய்பவர்கள், வயதானவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் ஆகியோர்
தாங்கள் வசிக்கும் இடத்திலேயே டிக்கெட்டுகளை பெற வாய்ப்பு இருந்து வந்தது.
இதற்கு அவர்கள் முன்பதிவு செய்யும் பொழுது கொடுக்கும் முகவரிக்கு
டிக்கெட்டுகள் அனுப்பப்பட்டு வந்தது. இந்த சேவைக்கு என வெவேறு வகுப்பு
டிக்கெட்டுகளுக்கு என தனித்தனி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
பெருநகரங்களில்
வசிப்போர் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவும், பிற நகரங்களில் வசிப்பவர்கள்
மூன்று நாட்களுக்கு முன்னதாகவும் இந்த வகையில் டிக்கெட்டுகளை முன்பதிவு
செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில்
இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி அமைப்பின் மூலம் டிக்கெட்
முன்பதிவுக்கு கடந்த 16 வருடங்களாக நடைமுறையிலிருந்த 'ஐ-டிக்கெட்' முறை,
மார்ச் 1-ஆம் தேதி முதல் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் இருந்து விலக்கிக்
கொள்ளப்பட்டுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
2011-ஆம்
ஆண்டிலிருந்து டிக்கெட் முன்பதிவு செய்பவர்களின் மொபைல் போனுக்கு
அனுப்பப்படும் குறுந்தகவலானது அதிகாரப்பூர்வ டிக்கெட்டாக கருதப்பட்டது.
அத்துடன் தற்பொழுது பயணிகளின் பெர்த் / இருக்கையை உறுதி செய்வது வரை
குறுந்தகவல் மூலம் நடைபெறுகிறது. அதே போல பயணிகளின் அடையாளச் சான்றுகள்
முன்பே உறுதி செய்யப்பட்டு விடுவதால், டிக்கெட் பரிசோதகர்கள் குறுந்தகவலைக்
கூட கேட்பது இல்லை.
இனி வேறு
யாருக்காவது டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் தங்கள் மொபைல் போனுக்கு வரும்
குறுந்தகவலை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பலாம். இத்தகைய குறுந்தகவலையும்
டிக்கெட்டாக கருதி ஏற்க வேண்டுமென்று டிக்கெட் பரிசோதகர்களுக்கு தெளிவாக
அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அடையாளச் சான்றுகளை மட்டும் சரி பார்த்து
இருக்கையினை உறுதி செய்யலாம்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.