அங்கீகாரம் இல்லாத 1,500 பள்ளிகள் மூடல்: கேரள அரசு நடவடிக்கை

அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வரும், 1,500 பள்ளிகளை மூட, கேரள மாநில அரசு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளதால், 15 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.


கேரளாவில், நேற்று நடந்த, மாநில சட்டசபை கூட்டத்தில், முஸ்லிம் லீக் கட்சி, எம்.எல்.ஏ., காதர், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீதான நடவடிக்கை குறித்து கேட்ட கேள்விக்கு, முதல்வர் பினராயி விஜயன் அளித்த பதில்: கல்வி உரிமை சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளாத பள்ளிகள் மீது, மாநில குழந்தை உரிமைகள் ஆணைய உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த, 2013ல், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள், அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அப்போது, 1,194 பள்ளிகள் விண்ணப்பித்தன.

இந்த பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்த பின், 395 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. மீதமுள்ள பள்ளிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், அந்த பள்ளிகள், அரசுக்கு எதிராக, மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. உள்கட்டமைப்பு வசதிகளை செய்யாத, அங்கீகாரம் இல்லாமல் இயங்கும், 1,500 பள்ளிகளை மூட, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.