சிபிஎஸ்இ 12வது கணக்குப்பதிவியல் வினாத்தாள் அவுட்: விசாரணைக்கு உத்தரவு

புது தில்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் கணக்குப் பதிவியல் தேர்வுக்கான வினாத்தாள், தேர்வுக்கு முன்பே வெளியானதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளார்.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் கணக்குப்பதிவியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார்கள் வந்துள்ளன. இது குறித்து விசாரணை நடத்துமாறு கல்வித் துறை இயக்குநரகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று சிசோடியா தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு கணிக்குப்பதிவியல் வினாத்தாள்களின் புகைப்படங்கள் தேர்வுக்கு முன்கூட்டியே வாட்ஸ்-அப்களில் பரவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னதாக, தில்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் தருண் நரங் தனது சமூக வலைத்தளத்தில், சிபிஎஸ்இ பொதுத் தேர்வுக்கான வேதியியல் விடைத்தாள்கள் அடங்கிய பார்சல் சீல் வைக்கப்பட்டு தில்லி மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்டதை தான் பார்த்ததாக பதிவு செய்திருந்தார்.
இப்படி எந்த பாதுகாப்பும் இல்லாமல் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் மெட்ரோ ரயிலில் அதுவும் ஒரே ஒருவரால் எடுத்துச் செல்லப்படுவது நிச்சயம் பாதுகாப்பாற்ற நிலையையே காட்டுகிறது. அதுவும் பொது போக்குவரத்தில் கொண்டு செல்வது என்பது ஏற்க முடியாதது என்று தெரிவித்திருந்தார்.