எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.

இதில் 10 லட்சத்து 1,140 பேர் தேர்வு எழுதினார்கள். அவர்களில் 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 பேர் மாணவ-மாணவிகள். 36 ஆயிரத்து 649 பேர் தனித்தேர்வர்கள்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரார்த்தனை

அதேபோல் சென்னை புழல், திருச்சி, பாளையங்கோட்டை மற்றும் கோவை ஆகிய 4 சிறைகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் 186 கைதிகள் தேர்வு எழுதினார்கள்.

மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். காலை 9 மணிக்கு பள்ளிக்கூட வளாகத்தில் இறைவணக்கம், பிரார்த்தனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பிரார்த்தனை முடிந்ததும் மாணவ-மாணவிகள் தேர்வு எப்படி எழுத வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தமிழ் முதல் தாள் தேர்வு நேற்று நடைபெற்றது. தேர்வு 10.15 மணிக்கு தொடங்கியது.

எளிதாக இருந்தது

தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க 7 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் ஆங்காங்கே திடீரென தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர். சென்னை, திருச்சி, அரியலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நேற்று 6 பேர் காப்பி அடித்ததாக பிடிபட்டனர்.

தமிழ் முதல் தாள் தேர்வு எளிதாக இருந்ததாக சில மாணவிகள் கருத்து தெரிவித்தனர். இது குறித்து மாணவிகள் கூறுகையில் “தமிழ் முதல் தாளில் 1 மதிப்பெண் கேள்விகள் சிலவும், 2 மதிப்பெண் கேள்விகளில் 2 கேள்விகளும் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டன. அவை மட்டும் கடினமாக இருந்தன. மற்ற கேள்விகள் அனைத்தும் எளிதாகவே இருந்தன” என்றனர்.