பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு துவங்கியாச்சு சைக்கிள், 'லேப்டாப்' வந்தபாடில்லை

சிவகங்கை:பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு துவங்கிய நிலையிலும் இதுவரை இலவச சைக்கிள், 'லேப்டாப்' வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு 2011--12 முதல் இலவச 'லேப்டாப்' வழங்கப்படுகிறது. இதற்காக 2017--18 க்கு 758 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதே போல் பிளஸ் 1 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படுகிறது. தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடக்கும் நிலையில், இதுவரை மாணவர்களுக்கு சைக்கிள், 'லேப்டாப்' வழங்கவில்லை.
மற்ற வகுப்புகளிலும் இலவச பாடப்புத்தகம், நோட்டுகள், சீருடைகள் தவிர, புவியியல் வரைபடம், புத்தகப்பை, கிரயான், வண்ணபென்சில், காலணி, கணித உபகரணப்பெட்டி போன்ற நலத்திட்டங்களும் வழங்கவில்லை. அடுத்த ஒரு மாதத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு முடிந்துவிடும். தேர்வு முடிந்த பின் இப்பொருட்களை பெறுவது சிரமம். பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான நலத்திட்டங்கள் வழங்குவதாக தம்பட்டம் அடிக்கும் அரசு, அனைத்து பொருட்களையும் குறித்த காலத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இலவச சைக்கிள், 'லேப்டாப்' கொடுக்க மாணவர்கள் பட்டியலை தயாரித்து பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பியுள்ளோம். வந்ததும் மாணவர்களை வரவழைத்து கொடுத்து விடுவோம். பள்ளியை விட்டு சென்றாலும் மாணவர்களுக்கு வழங்கப்படும்,' என்றார்