பல்லவனில் வந்த வல்லவன்(ர்)- PROFESSIONAL TAX REGARDING

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் திரு. செல்வமணி. இவர் அக்கிராமத்தின் நாட்டார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நக்கம்பாடி பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் இளைஞர். TATA என்ற ஆசிரியர்கள் சங்கத்தின் அரியலூர் மாவட்டத் தலைவர்.

அரசு ஊழியர்களுக்கு விதிக்கப்படும் தொழில் வரி எவ்வளவு என்பதற்கான அரசானையினை கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ன் கீழ் தலைமைச் செயலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். வழக்கம் போல தகவல் கிடைக்காததால் முதல் மேல் முறையீடும், ஆணையத்தில் 13-04-2017 அன்று இரண்டாவது மேல்முறையீடும் செய்திருந்தார்.

அதன் மீதான விசாரணை SA 2886/B/17 இன்று 20-02-18 காலை மாநில தகவல் ஆணையர் முனைவர் R.பிரதாப் குமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. எதிர்தரப்பினராக (1) பொதுத் தகவல் அலுவலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9 மற்றும் (2) பொதுத்தகவல் அலுவலர், உதவி இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம், சென்னை-15 ஆகியோர் ஆஜரானார்கள்.

ஆஜரானவர்கள் அரசு ஊழியர்களுக்கு தொழில் வரி ரூ 600/- என நிர்ணயம் செய்யப்பட்ட அரசானையினை காட்டினார்களாம். அதன் பிறகு அரசானை ஏதும் இல்லை என்றனராம். ஆனால் தற்போது ரூ.1180/ தொழில் வரியாக வசூலிப்பதாக திரு. செல்வமணி அவர்கள் ஆணையத்தில் தெரிவித்தார்.

ஆணையர் அவர்கள், "இவர் அவருக்காக மட்டும் கேட்கவில்லை; எனக்காகவும் கேட்கிறார்; ஏன் உங்களுக்காகவும் கேட்கிறார்" என்று கூறினாராம். மேலும் திரு. செல்வமணி அவர்கள் HRA - வீட்டு வாடகைப்படி மாநகராட்சி / நகராட்சி / கிராம ஊராட்சி என தனித்தனியாக வித்தியாசமாக அரசால் வழங்கப்படுகிறது. ஆனால் தொழில் வரி வசூலிப்பது மட்டும் தமிழகம் முழுவதும் ஒரே தொகை வசூலிக்கப்படுகிறது என்று ஆணையத்தில் முறையிட்டாராம். அதற்கு ஆணையர் நீங்கள் போராட்டம் நடத்துங்களேன் என ஆலோசனை வழங்கினாராம்.

ஆம் ஐயா, சட்டப் போராட்டம் நடத்த போகிறேன் நீதிமன்றம் மூலம். அதற்காகத்தான் இந்த அரசானையின் நகலை கேட்கிறேன் என்றாராம். ஆணையர் உடனடியாக அரசு ஊழியர்களுக்கான தொழில் வரி சம்மந்தமாக இறுதியாக அளிக்கப்பட்ட அரசானையினை வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்தாராம்.

வழக்கை வெற்றிகரமாக முடித்துவிட்டு அரியலூருக்கு பல்லவன் விரைவு வண்டியில் வந்த வல்லவன்(ர்) திரு. செல்வமணி அவர்களை சந்தித்து பேட்டி கண்ட பொழுது, "தொழில் நடத்துபவர்களே தொழில் வரி கட்டுவார்கள். உதாரணமாக ஒரு டீ கடை வைத்திருப்பவர் தொழில் வரி கட்டுவார். ஆனால் அக்கடையில் பணியாற்றும் டீ மாஸ்டர் தொழில் வரி கட்டுவதில்லை. ஏனென்றால் அவர் ஒரு கூலிக்காரர். ஒரு xerox கடையின் உரிமையாளர் தொழில் வரி கட்டுவார். ஆனால் அக்கடையில் பணியாற்றும் பெண் தொழில் வரி கட்டுவதில்லை. அதுபோல அரசு ஊழியர்கள் அரசின் கீழ் பணியாற்றுபவர்கள். அவர்கள் தொழில் செய்பவர்கள் அல்லர். அவர்களுக்கான தொழில் வரியை அரசே கட்டவேண்டும் என்றும், ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல" என்றும் தொழில் வரியை ரத்து செய்ய வேண்டி விரைவில் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்தார்.

திரு. செல்வமணி அவர்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன்.