அனைவருக்கும் உணவளிக்க தயாராகும் மொபைல் செயலி

பொது நிகழ்ச்சி மற்றும் விழாக்களில் மீதமாகும் உணவை பெற்று, ஏழை எளியவர்களுக்கு வழங்கும் 'நோ புட் வேஸ்ட்' குழுவினர், மொபைல் செயலியை, மாநில அளவில் அறிமுகப்படுத்த, கூடுதல் தகவல்களுடன் புதிதாக வடிவமைத்து வருகின்றனர்.


கோவை போத்தனுாரை சேர்ந்த பத்மநாபன், தனது நண்பர்களுடன் இணைந்து, 'நோ புட் வேஸ்ட்' குழுவை உருவாக்கியுள்ளார். மீதமாகும் உணவை வீணாக்காமல், மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும், உன்னத சேவையை இக்குழுவினர் மேற்கொள்கின்றனர்.

கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி உள்ளிட்ட இடங்களில், இச்சேவை துவக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜன., மாதம் மட்டும், மீதமான உணவுகளை பெற்று, 24 ஆயிரத்து, 15 நபர்களுக்கு பகிர்ந்து வழங்கியுள்ளனர். இதுவரை, 4 லட்சத்து, 75 ஆயிரத்து, 54 பேர் பயனடைந்து உள்ளனர்.

இத்திட்டம், சமீபத்தில், சென்னையில் துவக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் சார்பில் ஒரு வாகனம், உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அமுதா, தனது சம்பளத்தில் இருந்து ஒரு வாகனம் வாங்கிக் கொடுத்துள்ளார். இவ்வாகன பயன்பாட்டை, அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

உணவு வீணாவதை தவிர்க்க உருவாக்கியுள்ள மொபைல் செயலி தொடர்பாக, அமைச்சர் மற்றும் ஆணையரிடம் 'நோ புட் வேஸ்ட்' குழுவினர் விளக்கினர். இச்செயலியை மாநிலம் முழுவதும் அனைவரும் பயன்படுத்தும் வகையில், அரசு சார்பில் செயல்படுத்த, மக்கள் நல்வாழ்வு துறை முடிவு செய்துள்ளது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் மொபைல் எண், முகவரி உள்ளிட்ட தகவல்களுடன் செயலி வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது.

'நோ புட் வேஸ்ட்' குழுவினர் கூறுகையில், 'உணவை வீணக்காதே; பகிர மறக்காத' என்கிற அடைமொழியுடன், மீதமாகும் உணவை சேகரித்து, ஏழை எளியோருக்கு வழங்குகிறோம். நாங்கள் அறிமுகப்படுத்திய மொபைல் செயலியை, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி உள்ளனர்.

'மாநில அளவில், அரசு சார்பில் அறிமுகப்படுத்த, புதிதாக மொபைல் செயலி உருவாக்கும் பணி மேற்கொள்கிறோம். ஓட்டல்கள், லாட்ஜ்கள், கல்யாண மண்டபங்கள் விபரம் ஒருங்கிணைக்கப்படும். மண்டபங்களில் நிகழ்வு நடப்பதை, முன்கூட்டியே பதிவு செய்யும் வசதி செய்யப்படும். குழுவினர் தயாராக இருப்பர்; உணவு மீதமாகி இருந்தால், அவற்றை பெற்று, ஏழைகளுக்கு வழங்குவோம்' என்றனர்.