பள்ளிகளில் யோகா பயிற்சி வகுப்பு: செங்கோட்டையன் அறிவிப்பு

சென்னை: ''தமிழக அரசு பள்ளிகளில், யோகா பயிற்சி வகுப்புகள் துவங்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.சென்னை, அரும்பாக்கம், சித்தா மருத்துவமனையில், சித்தா மாணவர்கள் நடத்தும், 'நலம் வாழ்வு - 2018' என்ற கண்காட்சி, வரும், 18 வரை நடைபெறுகிறது.

மருத்துவ முகாம் : கண்காட்சியை, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் ஆகியோர், நேற்று துவக்கி வைத்தனர். மேலும், 'மழைச்சாரல்' என்ற, கல்லுாரி மலரையும்வெளியிட்டனர். இந்த கண்காட்சியில், சித்தா மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம், சித்தர்கள் வரலாறு, அவர்கள் பயன்படுத்திய குறிப்புகள் மற்றும் விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.மேலும், பாரம்பரிய உணவு மற்றும் சிறுதானியங்களின் முக்கியத்துவம்,சித்தர் யோகம் மற்றும் பிரணாயாமம், தமிழர்களின் பாரம்பரிய பழக்கங்களில், அறிவியல் விளக்கங்கள், யோகா மற்றும் வர்மம் செயல்முறை விளக்கம், பாரம்பரிய நெல் கண்காட்சி ஆகியவையும் இடம் பெற்று உள்ளன.கண்காட்சி துவங்கிய முதல் நாளான நேற்று, ஏராளமான பொது மக்கள் பார்வையிட்டு, சித்தா மருத்துவம் பற்றி தெரிந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், அமைச்சர், விஜயபாஸ்கர் பேசுகையில், ''டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் குணப்படுத்தலில், சித்தா மருத்துவம் முக்கிய பங்கு வகித்து வருகிறது.''சித்தா மருத்துவ துறையில் உள்ள, காலியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பழநியில், புதிய சித்தா மருத்துவமனை துவக்கப்பட உள்ளது,'' என்றார்.ஏற்பாடுஅமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ''சித்தா மருத்துவ கண்காட்சியை, பள்ளி, கல்லுாரி மாணவர்களும் பார்வையிட ஏற்பாடு செய்யப்படும். அதேபோல், அனைத்து பள்ளிகளிலும், யோகா பயிற்சி வகுப்புகள் துவங்கப்படும்,'' என்றார்.12 மாவட்டங்களில் நடமாடும் நுாலகம்

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளியில், நேற்று புத்தக கண்காட்சியை துவக்கி வைத்து, அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:வரும் கல்வியாண்டில், புதிய பாடத்திட்டம் கட்டாயம் அமலுக்கு வரும். இரண்டு ஆண்டுகளில், அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாடத்திட்டம் அமலாகும். அரசு பள்ளி மாணவர்களுக்கு, நான்கு வகையில், புதிய சீருடைகள் அறிமுகம் செய்யப்படும்.
அரசு பள்ளிகளில், காலியாக உள்ள, ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். 12 மாவட்டங்களில், நடமாடும் நுாலகங்கள் ஏற்படுத்தப்படும். இந்த நுாலகங்கள், காலை, மாலை என,தினமும் இரண்டு பள்ளிகளுக்கு சென்று இயங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்