முதுநிலை மருத்துவ படிப்பு மார்ச்சில் விண்ணப்பம்?

'முதுநிலை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பம், மார்ச்சில் வினியோகிக்கப்படும்' என, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், எம்.டி., - எம்.எஸ்., என்ற, முதுநிலை மருத்துவ
மேற்படிப்பு மற்றும் டிப்ளமா மேற்படிப்புக்கு, 1,585 இடங்கள் உள்ளன. 2018 - 19ம் கல்வி ஆண்டில், இந்த படிப்புகளில் சேருவதற்காக நடந்த, 'நீட்' தேர்வின் முடிவுகள், ஜன., 23ல், வெளியாகின. அதனால், விண்ணப்பம் வினியோகம், எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பில் டாக்டர்கள் உள்ளனர்.
இது குறித்து, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: 'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட்ட தேர்வு வாரியம், இன்னும் தரவரிசை பட்டியலை தரவில்லை. மேலும், மருத்துவ மேற்படிப்பில், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு, இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக, கடினமான பகுதி, தொலைதுார பகுதிகள் குறித்து ஆய்வு நடத்த, நியமிக்கப்பட்ட கமிட்டியும், ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. அந்த அறிக்கைக்கு, உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும். எனவே, மார்ச்சில் விண்ணப்பம் வினியோகம் துவங்கும். ஏப்., - மே மாதங்களில் கவுன்சிலிங் நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.