'செட்' தேர்வு விண்ணப்பம்: இணையதளத்தால் சிக்கல்

'செட்' தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளம், கடைசி தேதிக்கு முன் முடங்கியதால், பட்டதாரிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கல்லுாரிகள், பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவில், 'நெட்' அல்லது, மாநில அளவில், 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். செட் தேர்வை தமிழக அரசின் சார்பில், கொடைக்கானல் தெரசா பல்கலை, இந்த ஆண்டு நடத்துகிறது. 


மார்ச், 4ல் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கான ஆன்லைன் பதிவு,www.tnsetexam2018mtwu.inஎன்ற இணையதளத்தில், டிச., 18ல் துவங்கியது; பிப்.,9ல் முடியும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி தேதிக்கு முன், பிப்., 3 முதல், இணையதளத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெரும்பாலானவர்களுக்கு, 'ஆன்லைன்' விண்ணப்பங்களை பதிவு செய்தாலும், கட்டணம் செலுத்துவதற்கான வசதி இயங்கவில்லை; பலருக்கு, விண்ணப்ப பதிவே பாதியுடன் நிற்கிறது. அதனால், செட் தேர்வு விண்ணப்பதாரர்கள், கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.இதுகுறித்து, உயர்கல்வித் துறை உரிய முடிவு எடுத்து, செட் தேர்வுக்கான இணையதள சிக்கல்களை தீர்க்க வேண்டும் என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.