மாணவர்கள் சந்தேகங்களை தீர்க்க விரைவில், 'ஹெல்ப்லைன்'

ஈரோடு: ''மாணவர்களுக்கு, புதிய பாடத்திட்டங்களில் ஏற்படும் சந்தேகங்களை போக்க, 24 மணி நேரமும் பதிலளிக்கும் வகையில், '14417' என்ற, ஹெல்ப்லைன் வசதி, விரைவில் துவக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன்
கூறினார்.ஈரோடு மாவட்டம், காராப்பாடியில், அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:வரும் கல்வியாண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் துவங்கவுள்ளது. பாடத்திட்டத்தில் ஏற்படும் சந்தேகங்களை போக்கிடவும், மேல்நிலை படிப்புக்கு பின், எந்த கல்லுாரிகளில் சேர்வது, தேர்வு முறைகள் உள்ளிட்ட கேள்விகளுக்கு, 24 மணி நேரமும் பதிலளிக்கும் வகையில், '14417' என்ற, 'ஹெல்ப்லைன்' வசதி விரைவில் துவக்கப்படும். மாணவர்களின் தற்கொலை எண்ணங்கள் தோன்றாமல் தவிர்க்கவும், 'சிநேகா' என்ற தொண்டு நிறுவனத்துடன், கல்வித்துறை இணைந்து, மாணவர்களின் வீட்டிற்கே சென்று, 'கவுன்சிலிங்' அளிக்கப்படும். புதிய பாடத்திட்டங்களை, மாணவர்களுக்கு கற்பிக்க ஏதுவாக, இரண்டு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர்
கூறினார்.