பொது தேர்வு எழுதும் மாணவர்கள் இலவச பஸ் பாஸ் மூலம் தேர்வு மையத்துக்குச் செல்லலாம்: மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்களுக்கு தாங்கள் வைத்திருக்கும் பஸ் பாஸ் மூலம் செல்லலாம் என சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திங்கள்கிழமை அக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மார்ச் 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசுப் பொதுத் தேர்வும், மார்ச் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வும் நடைபெறுகிறது. இந்தத் தேர்வில் கலந்து கொள்ளும், பள்ளி மாணவ-மாணவிகள் வைத்துள்ள இலவச பேருந்து பயண அட்டையைப் பயன்படுத்தி தங்கள் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து தேர்வு மையங்களுக்கு இலவசமாக சென்று திரும்ப அனுமதிக்கப்படுவர்.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக நடத்துனர்கள், ஓட்டுநர்கள் இத்தகைய மாணவர்களை பேருந்தில் பயணிக்க அனுமதிக்குமாறு ஏற்கனெவே உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வருவாய் உதவி மேலாளர்கள், பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு மேற்படி உத்தரவு குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கி, பள்ளி நேரங்களில் எக்காரணம் கொண்டும் பேருந்துகளை நிறுத்தி காலம் தாழ்த்தாமல் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு எவ்வித இடையூறுமின்றி பயணம் செய்யும் வகையில் பேருந்து இயக்கிட ஏதுவாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.