தேர்வு பணி: ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு

னியார் பள்ளிகள் ஏற்பாடு செய்யும், உபசரிப்புகளை, தேர்வு பணி ஆசிரியர்கள் ஏற்கக் கூடாது என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழக பாடத் திட்டத்தில், மார்ச்சில், பொது தேர்வுகள் துவங்க உள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 27 லட்சம் மாணவர்கள்
தேர்வு எழுதுகின்றனர். இதற்காக, 2,794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு பணிகளில், ஒரு லட்சம் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், தேர்வில் முறைகேடுகளை தடுக்க, ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன் விபரம்: தேர்வு பணிக்கு செல்லும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், தேர்வறைகளுக்குள் மொபைல் போனை எடுத்துச் செல்லக் கூடாது. வினாத்தாள் கட்டு பிரிக்கப்பட்ட பிறகோ, தேர்வுத்துறை கட்டுப்பாடு அதிகாரிக்கு அனுப்புவதற்கு முன்னரோ, மொபைல் போனை, 'ஆன்' செய்யக் கூடாது. தேர்வு மையங்களில், தேவையற்ற காகிதங்கள், புத்தகங்கள் இருந்தால், தேர்வு துவங்கும் முன், அவற்றை அகற்ற வேண்டும். தேர்வர்களின் உடைமைகளை, அறைக்குள் அனுமதிக்க கூடாது.தனியார் பள்ளிகளின் தேர்வு மையங்களில், இலவசமாக டீ, காபி போன்றவை வழங்கப்பட்டால், அதை ஏற்கக்கூடாது. உணவு உள்ளிட்ட உபசரிப்பையும் ஏற்கக் கூடாது; அன்பளிப்புகளையும் பெறக் கூடாது.இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.